குர்‍ஆன் அத்தியாயம் 1: அல்ஃபாத்திஹா ஆய்வு கட்டுரைகள்

(திருக்குர்‍ஆன் களஞ்சியம்)

அல்ஃபாத்திஹா ஆய்வு கட்டுரைகள்

  • 1.1 கிராத்துக்களில் அல் ஃபாத்திஹா ஆய்வு: குர்‍ஆன் 1:4 எந்த உச்சரிப்பு சரியானது? மாலிகி, மலிகி, மாலிக, மல்கி, மில்கி, மிலிகி, மலக, மாலிக், மில்க
  • 1.2 கர்த்தரின் ஜெபமும், அல் ஃபாத்திஹாவும் ஓர் ஒப்பீடு

1.1 கிராத்துக்களில் அல் ஃபாத்திஹா ஆய்வு: குர்‍ஆன் 1:4 எந்த உச்சரிப்பு சரியானது? மாலிகி, மலிகி, மாலிக, மல்கி, மில்கி, மிலிகி, மலக, மாலிக், மில்க

குர்‍ஆனின் முதல் அத்தியாயம் நான்காம் வசனம், கீழ்கண்டவாறு உள்ளது:

1:4. (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).(முஹம்மது ஜான் தமிழாக்கம்)

1:4. (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி (சவூதி தமிழாக்கம்)

ஹ‌ஃப்ஸ் குர்‍ஆன் அரபி மூலத்தில்: மாலிகி யௌமித்தீன் (مٰلِكِ يَوْمِ الدِّيْنِؕ)

இன்று பெரும்பான்மை முஸ்லிம்கள் பயன்படுத்துவது, ஹஃப்ஸ் குர்‍ஆன் ஆகும். இது இமாம் ஹஃப்ஸ் என்பவர் மூலமாக கொடுக்கப்பட்ட குர்‍ஆன் (கிராத்) ஆகும். இதே போன்று, முஹம்மதுவின் காலம் தொடங்கி பல இமாம்கள், இஸ்லாமிய அறிஞர்கள் மூலமாக குர்‍ஆன் ஓதப்பட்டு, நம்மிடம் வந்து சேர்ந்துள்ளது. 

ஆக, இன்று நம்மிடம் 20க்கும் அதிகமான அரபி மூல கு‍ர்‍ஆன்கள் உள்ளன. அவைகளை குர்‍ஆன் கிராத்துக்கள் என்பார்கள். இவைகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இல்லை, ஒரே வார்த்தையை வெவ்வேறு விதமான வார்த்தைகளைக் கொண்டு ஓதியுள்ளார்கள் மற்றும் எழுதியுள்ளார்கள். இந்த அரபி மூலங்கள் அனைத்தும் நம்மிடம் உள்ளன.

குர்‍ஆன் ஏழுவட்டார மொழி வழக்கில் இறங்கியது என்று முஹம்மது கூறியுள்ளார், அதனை இஸ்லாமிய உலகம் அங்கீகரிக்கிறது. இந்த ஏழு வட்டார குர்‍ஆன்கள் தான் இன்னும் பெருகி இப்போது 20க்கும் அதிகமான குர்‍ஆன்களாக மாறியுள்ளது. இக்கட்டுரையின் கடைசியில் ஏழுவட்டார குர்‍ஆன் பற்றிய முந்தைய  கட்டுரைகளின் தொடுப்புக்களை கொடுத்துள்ளேன்.

இக்கட்டுரையின் ஆய்வு  குர்‍ஆன் 1:4ம் வசனத்தில் வரும் ஒரு வார்த்தையைப் பற்றியதாகும்.  கீழ்கண்ட அட்டவணையை பார்க்கவும். குர்‍ஆன் 1:4ல் வரும் வசனத்தை அக்கால இஸ்லாமிய அறிஞர்கள் எப்படி மாற்றி உச்சரித்து இருந்துள்ளார்கள் என்பதை அறியமுடியும்.

  Source: corpuscoranicum.de/lesarten/index/sure/1/vers/4

மேற்கண்ட அட்டவணையின் வண்ணங்களை கணக்கில் கொள்ளவேண்டாம், கிராத்துக்களை வேறுபடுத்திக் காட்ட பல வண்ணங்களை கொடுத்துள்ளேன், அவ்வளவு தான்.

இந்த அட்டவணையில் உள்ளவற்றை புரிந்துக்கொள்ள சில விளக்கங்களை இப்போது பார்ப்போம்:

1) மாலிகி (māliki):

மாலிகி என்ற வார்த்தையை பயன்படுத்தும் கிராத்துக்கள் (குர்‍ஆன்கள்) மற்றும் அறிஞர்கள் பற்றிய விவரம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்று உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்படும் குர்‍ஆன், 1924ம் ஆண்டு எகிப்து வெளியிட்ட 'ஹஃப்ஸ் கிராத்தில்' உள்ள குர்‍ஆன் ஆகும், இது தான் முதன் முதலில் பிரிண்ட் (அச்சு) செய்யப்பட்ட குர்‍ஆன் ஆகும்.  இதை "Print edition of the Quran" என்றும்  ஆஸிம் வழியாக, ஹஃப்ஸ் இமாம் மூலமாக  வந்த குர்‍ஆன் என்றும் கூறுவார்கள். இதில் மாலிகி என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. 

அடுத்ததாக, இப்னு முஜாஹித் என்ற இஸ்லாமிய அறிஞர், தம்முடைய " Kitāb al-sabʿa fī l-qirāʾāt" என்ற புத்தகத்தில் பல கிராத்துக்கள் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ளார். இவர் குர்‍ஆனின் கிராத்துக்களில் ஆய்வு செய்த சிறந்த அறிஞர் ஆவார்.  இவர் தம் புத்தகத்தில், முஹம்மதுவும், ஆஸிம் என்பவரும் (இவர் தான் ஹஃப்ஸ் இமாமின் ஆசிரியர்), மேலும் அல் கிசாய் என்ற கிராத்திலும், இதே வார்த்தை அதாவது 'மாலிகி' என்பதை பயன்படுத்தியுள்ளார்கள் என்று கூறுகின்றார். (இவரைப் பற்றி மேலும் அறிய இங்கு சொடுக்கவும்).

அடுத்ததாக அபூ அமர் அத்தானி என்ற இஸ்லாமிய அறிஞர் பற்றியது, இவரும் குர்‍ஆனின் கிராத்துக்கள் மற்றும் ஹதீஸ்கள் பற்றிய ஆய்வுகள் செய்தவர் ஆவார். இவர் தமது " Kitāb at-Taisīr fī 'l-qirāʾāt as-sabʿ" என்ற புத்தகத்தில்,  ஆஸிமும், அல் கிசாயும் "மாலிகி" என்ற வார்த்தையை தங்கள் கிராத்துக்களில் பயன்படுத்தினார்கள் என்று கூறுகின்றார்.

மேற்கண்ட அட்டவணையில் "நஃபி(Nafi)" என்று இருப்பது தான் "வர்ஷ்" குர்‍ஆன் ஆகும்.

இப்போது உங்களுக்கு மேற்கண்ட அட்டவணையை எப்படி படித்து புரிந்துக்கொள்ளவேண்டும் என்று தெரிகின்றதா? இதே போன்று தான் 2 லிருந்து 20 வரை, பலர் பல வகையில் குர்‍ஆனை ஓதியுள்ளார்கள், முக்கியமாக குர்‍ஆன் 1:4ம் வசனத்தில் வரும் ஒரு வார்த்தையை 20க்கும் அதிகமான வகையில் ஓதியுள்ளார்கள்.

  1. māliki - மாலிகி
  2. maliki - மலிகி
  3. malki - மல்கி
  4. milki - மில்கி
  5. miliki  - மிலிகி
  6. mālika - மாலிக‌
  7. malaka - மலக‌
  8. malika - மலிக‌
  9. mālik - மாலிக்
  10. malka  - மல்கா
  11. malkī - மல்கீ
  12. milka - மில்க‌
  13. maliku - மலிகு
  14. malikan - மலிகன்
  15. mālikun - மாலிகுன்
  16. māliku - மாலிகு
  17. malīki - மலீகி
  18. mēliki - மேலிகி
  19. mæliki - மெயிலிகி
  20. mallāki - மல்லாகி

1924ம் ஆண்டு ஹஃப்ஸ் கிராத்தில் உள்ள குர்‍ஆனை பிரிண்ட் எடுத்ததால், இன்று பெரும்பான்மை முஸ்லிம்கள் "மாலிகி" என்று குர்‍ஆன் 1:4ஐ வாசிக்கிறார்கள். ஒரு வேளை, வர்ஷ் கிராத் குர்‍ஆனை பிரிண்ட் செய்து இருந்திருந்தால், முஸ்லிம்கள் "மலிகி" என்று இன்று வாசித்து இருந்திருப்பார்கள்.

கார்பஸ் கொரோனிகம் தளம்

இந்த தளம் குர்‍ஆனின் ஆரம்பகால கையெழுத்துப் பிரதிகள், சுருள்கள் பற்றிய ஆய்வு, குர்‍ஆன் கிராத்துக்கள் பற்றிய ஆய்வுகளைச் செய்கிறது. குர்‍ஆனின் பழமையான பிரதிகளை படமெடுத்து வெளியிடுகிறது.  குர்‍ஆனின் ஆய்வுகளை செய்ய விரும்புபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள தளமாகும். இந்த தளத்திருந்து தான் தற்போது படித்துக் கொண்டு இருக்கும் கட்டுரையை நான் தொகுத்தேன்.

இந்த தளம் தன்னைப் பற்றிச் சொல்லும் விவரங்களை இங்கு படிக்கலாம்.

https://corpuscoranicum.de/about/index

About the project: Corpus Coranicum – Textual documentation and historically critical commentary on the Qur’an

The project's goals: The project offers systematic access to early Qur'anic manuscripts with images and transliterated text. In parallel, a catalogue of variant readings included in the works of the Islamic scholarly tradition is produced. Based on textual history, the project creates a chronological commentary using methods of literary studies and referring to relevant texts from Antiquity and Late Antiquity. These source texts are accessible in the database 'Texts from the environment of the Qur'an' (TEQ). The development of the first Muslim community is reconstructed for the first time as the interaction between the Prophet and the first addressees in Mecca and Medina.

1.2 கர்த்தரின் ஜெபமும், அல் ஃபாத்திஹாவும் ஓர் ஒப்பீடு

கிறிஸ்தவர்களுக்கு எப்படி கர்த்தரின் ஜெபம் இருக்கிறதோ அதே போன்று முஸ்லிம்களுக்கு அல் பாத்தியா அத்தியாயம் இருக்கிறது என்று சொல்லலாம்.  இந்த இரண்டு ஜெபங்களும் ஒன்றா? குர்‍ஆனின் பாத்தியா ஜெபத்தை ஒரு கிறிஸ்தவன் சொல்ல முடியுமா? அதேபோன்று கர்த்தரின் ஜெபத்தை ஒரு முஸ்லிம் சொல்ல முடியுமா? 

வாருங்கள் ஒரு சிறு ஒப்பீடு செய்யலாம்.

புதிய ஏற்பாட்டில் இந்த ஜெபம் இரண்டு இடங்களில் வருகிறது, மத்தேயு மற்றும் லூக்கா சுவிசேஷங்களில் இது வருகிறது.  மத்தேயுவில் நீண்ட ஜெபமாகவும்,  லூக்காவில் சுருக்கமான ஜெபமாகவும் வருகிறது.

குர்‍ஆன்

அல் ஃபாத்திஹா 1-7

இயேசு கற்றுக்கொடுத்த ஜெபம்

மத்தேயு 6:9-13

1:1 அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)

1:2 அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

1:3 (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.

1:4 (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).

1:5 (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

1:6 நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!

1:7 (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.

6:9. நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;

6:10. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.

6:11. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.

6:12. எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.

6:13. எங்களைச் சோதனைக் குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்,

 

கர்த்தரின் ஜெபம் அரபியில் மற்றும் அரபி ஒலிப்பெயர்ப்பில்:

ஆங்கிலம் மற்றும் தமிழில் ஒலிப்பெயர்ப்பு

அரபி மற்றும் ஒலிப்பெர்யர்ப்பு

Our Father, Who art in heaven,

அபானா அல்லதீ ஃபீ அஸ்ஸமாவாதி

أَبَانَا الذِي فِي السَّمَاوَاتِ

Abā-nā ‘alladhī fī as-samāwāti,

Hallowed be thy name

லிய த கத்தஸ் இ ஸ்முக

لِيَتَقَدَّسَ اسْمُكَ

li-ya-ta-qaddas-i asm-u-ka

Thy kingdom come

லிய தி மலகூதுக‌

لِيَأْتِ مَلَكُوتُكَ

li-ya-’ti malakūt-u-ka,

Thy will be done on earth as in heaven.

லி தகும் மஷிஅதுக ஃபீ அலர்த் இ கமா ஃபீ அஸ்ஸமா

لِتَكُنْ مَشِيئَتُكَ فِي الأَرْضِ كَمَا فِي السَّمَاءِ

li-takun ma-shī’at-u-ka fī al-’ar-i kamā fī as-samā.

Give us our daily bread

அதினா குப்ஸ் அனா அல் யௌமி

اعْطِنَا خُبْزَنَا اليَوْمِيَّ

’a-ʽṭi-nā khubz-a-nā al-yawm-ī,

And forgive our trespasses

அ ஃபினா மிம்மா இலய்னா

اعْفِنَا مِمَّا عَلَيْنَا

‘a-fi-nā mi-mā ’ilay-nā

As we forgive those who trespass against us

ஃபகத் அஃபய்னா நஹ்னு அய்துன் மின் லனா அலய்ஹி

فَقَدْ أَعْفَيْنَا نَحْنُ أيَضاً مَنْ لَنَا عَلَيْهِ

faqad ‘afay-nā nanu aydhun min la-nā ‘alay-hī

And lead us not into temptation,

வலா துத் ஹில்னா ஃபில் தஜ்ரிபதின்

وَلاَ تُدْخِلْنَا فِي تَجْرِبَةٍ

Wala thud-hil-nā fī ta-jribat-in,

But deliver us from evil,

லகின் நஜ்ஜினா மினஷ் ஷிர்ரீரி

لَكِنْ نَجِّنَا مِنَ الشِّرِّيرِ

lakin najji-nā mina alsh-shirrīr

For thine is the kingdom, the power and the glory forever, Amen

லஅன்ன லக அல்முல்கு வஅல் கூவது வஅல் மஜ்த இலா அல் அபதி. ஆமீன்

لأَنَّ لَكَ الْمُلْكَ وَالْقُوَّةَ وَالْمَجْدَ إِلَى الأَبَدِ, آمِين

l’anna laka al-mulku wa-al-qūwatu wa-al-majda ’ilā al-’abadi. ’āmīn

பிள்ளைகளின் உரையாடல், அடிமைகளின் வேண்டுதல்:

முதலாவதாக, இயேசு கற்றுக்கொடுத்த ஜெபத்தில், மனிதனுக்கும் இறைவனுக்கு இடையே இருக்கும் மிகச்சிறந்த உறவுமுறையாகிய "எங்கள் பிதாவே" என்ற வார்த்தைகளோடு தொடங்க கற்றுக் கொடுக்கின்றார். ஆனால், குர்‍ஆனின் ஜெபத்தில் "அல்லாஹ்வின் பெயரில் தொடங்குகிறது", ஏனென்றால், எந்த காலத்திலும் முஸ்லிம்கள் அல்லாஹ்வின் பிள்ளைகள் ஆகமுடியாது, அவர்கள் அல்லாஹ்வின் அடிமைகளே ஆவார்கள். அல்லாஹ்வை ஒரு முஸ்லிம் "பிதாவே, என் தகப்பனே" என்று அழைப்பது மிகப்பெரிய பாவமாக கருதப்படுகிறது. 

இரண்டாவதாக, இவ்விரு விண்ணப்பங்களிலும், இறைவனை போற்றுவது இருக்கின்றது. மூன்றாவதாக, தங்கள் தேவைகளை, வேண்டுதல்களை இவ்விரு வேண்டுதல்களிலும் காணலாம். 

மன்னிப்பும், குற்றச்சாட்டும்:

குர்‍ஆனின் ஜெபத்தில் சொல்லிக்கொடுக்கப்படாத‌  ஒன்று, இயேசு கற்றுக்கொடுத்த ஜெபத்தில் முக்கியமாக வருவது என்னவென்றால் "மன்னிப்பு" என்ற ஒன்றாகும். இயேசு கற்றுக்கொடுத்த ஜெபத்தை செய்யும் ஒவ்வொரு கிறிஸ்தவரும் உச்சரிக்கும் ஒன்று, 'எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்' என்பதாகும். "மன்னிப்பு" என்பது பைபிளின் முதல் புத்தகம் ஆதியாகமம் தொடங்கி, வெளிப்படுத்தல் வரை தொடரும் ஒரு இறையியல் ஆகும். 

இதில் இன்னொரு அழகான விஷயம் என்னவென்றால், "தேவனிடம் மன்னிப்பு கோரும் நபர்கள், தாங்கள் முதலாவது மற்றவர்களை மன்னிக்கவேண்டும், அதன் பிறகு, தேவனிடம் மன்னைப்பை கேட்கவேண்டும்'.  நமக்கு எதிராக செயல்படுபவர்களை நாம் மன்னிக்காமல், இறைவனுக்கு எதிராக செயல்படும் நாம் எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவரிடம் மன்னிப்பு கேட்கமுடியும்?

இதையே சிறிது தெளிவாக மற்றி, இயேசு இன்னொரு இடத்தில் தம் சீடர்களுக்கு கற்றுக்கொடுக்கின்றார், பார்க்க: லூக்கா 11:4: 'எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்; நாங்களும் எங்களிடத்தில் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே'. நீ மன்னித்தால் தான் உனக்கு மன்னிப்பு உண்டு என்று பல இடங்களில் இயேசு போதித்தார், இதையே அனுதின ஜெபத்தில் நினைவு கூர்ந்து தேவனிடம் மன்னிப்பு கேட்கும் படி இயேசு கற்றுக்கொடுத்தார்.

குர்‍ஆனின் அல்ஃபாத்திஹாவில் இல்லாத ஒன்று இந்த மன்னிப்பு ஆகும்.

கடைசியாக, இன்னொரு வித்தியாசத்தை இங்கு சுட்டிக்காட்டவேண்டும். இயேசுவின் ஜெபத்திலும், குர்‍ஆனின் ஜெபத்திலும் மற்றவர்கள் வருகிறார்கள்.  கிறிஸ்தவனின் ஜெபத்தில், அந்த மற்றவர்களை நாங்கள் மன்னிக்கிறோம் என்று ஒரு கிறிஸ்தவன் அறிக்கையிட்டு, இறைவனிடம் மன்னிப்பு கேட்கிறான். ஆனால், ஒரு முஸ்லிமின் ஜெபத்தில், அந்த மற்றவன் செய்த செயலினால், அல்லாஹ் அவன் மீது கோபம் கொண்டான், எனவே அவனைப்போல என்னை ஆக்காதே, என்னை நேரான வழியில் நடத்து என்று வேண்டுதல் செய்ய முஸ்லிம் கற்றுக்கொடுக்கப்டுகின்றான்.

குர்‍ஆன் 1:7 (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.

இயேசு கற்றுக்கொடுத்த ஜெபத்தில், 'ஒரு மன்னிப்பு மேலோங்கி காணப்படுகிறது', அல்லாஹ் கற்றுகொடுக்கும் ஜெபத்தில், 'ஒரு தீயவனோடு ஒப்பிட்டு, அவனைப்போல என் மீது கோபம் கொள்ளாதே' என்று விண்ணப்பம் செய்யப்படுகின்றது.

குர்‍ஆனின் இந்த‌ வசனத்தை (1:7)  பார்க்கும் போது, இயேசு சொன்ன ஒரு உவமை நினைவிற்கு வருகிறது.

லூக்கா 18:9-14

9. அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்.

10. இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.

11. பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.

12. வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.

13. ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.

14. அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.

ஒருவன் விண்ணப்பம் செய்யும் போது, தான் ஒரு குற்றவாளி என்பதை உணர்ந்து, மன்னிப்பு கேட்கிறான், இன்னொருவனோ, மற்றனை ஒப்பிட்டுப் பார்த்து 'நான் அவனைப்போல கெட்டவன் அல்ல' என்று விண்ணப்பம் செய்கிறான்.  குர்‍ஆன் கற்றுக்கொடுக்கும் அல்ஃபாத்திஹாவில் இதைத் தான் நாம் கடைசி வசனத்தில் காண்கிறோம்: "உன் கோபத்திற்கு ஆளான யூதர்களைப்போல என்னை ஆக்காதே! உன் வழியை விட்டு விலகியவர்களாக உள்ள கிறிஸ்தவர்களைப் போல என்ன ஆக்காதே" என்று மற்றவர்களை ஒப்பிட்டுப் பார்த்து, அல்லாஹ்விடம் விண்ணப்பம் செய்ய குர்‍ஆன் சொல்லிக்கொடுக்கிறது.

கடைசியாக, இவ்விரு மார்க்கங்களின் ஜெபங்களை கவனிக்கும் போது நமக்கு தெரிவதென்ன? கிறிஸ்தவ ஜெபத்தில் மனிதனுக்கு இறைவனுக்கும் உள்ள 'தந்தை மகன்' என்ற உறவும், அதே போன்று "மற்றவர்களை மன்னித்தால் தான் நமக்கு மன்னிப்பு கிடைக்கும் என்ற அடிப்படை கிறிஸ்தவ இறையியலும் மேலோங்கி நிற்கிறது". ஆனால், குர்‍ஆனின் அல்ஃபாத்திஹாவை கவனித்தால், "அல்லாஹ் உன் எஜமான், நீ அவனுக்கு அடிமை என்ற உறவுமுறையும், அதே போன்று, மற்றவர்களுக்கு நேராக விரலை நீட்டி, அவனைக் குற்றப்படுத்தி, அவனைப்போல என்ன ஆக்காதே' என்ற குற்றம் கண்டு ஒதுங்கிச் செல்லும் மனப்பான்மையே மேலோங்கி நிற்கிறது”.

அல்ஃபாத்திஹாவை ஒரு கிறிஸ்தவன் சொல்லமுடியுமா?

இதுவரை நாம் இரண்டு மார்க்கங்களின் பொதுவான ஜெபங்களை ஒப்பிட்டுள்ளோம். அல்ஃபாத்திஹாவை ஒரு கிறிஸ்தவன் ஜெபமாக சொல்லமுடியுமா? என்று கேட்டால், "இல்லை, அதனை முழுவதுமாக சொல்லமுடியாது" என்று கூறலாம். ஏனென்றால்:

1) அல்ஃபாத்திஹாவின் முதல் வசனத்தில் "அல்லாஹ்வின்" பெயர் வருகிறது, அந்நிய தெய்வத்தின் பெயரில், அல்லது அதனை நோக்கி எப்படி ஒரு கிறிஸ்தவன் ஜெபிக்கமுடியும்?

2) அல்ஃபாத்திஹாவின் கடைசி (7) வசனத்தில் மற்றவர்களை ஒப்பிட்டு ஜெபிக்கும் படி சொல்லியுள்ளதால், இதனையும் ஒரு கிறிஸ்தவன் ஜெபிக்கமுடியாது. இது மட்டுமல்ல, இந்த வசனத்தில் யூதர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானவர்கள் என்றும், கிறிஸ்தவர்கள் வழிவிலகிச் சென்றவர்கள் என்றும் வருவதினால், இந்த அல்ஃபாத்திஹா ஜெபத்தை கிறிஸ்தவர்கள் ஜெப்பிக்கமுடியாது.

கர்த்தரின் ஜெபத்தை முஸ்லிம்கள் ஜெபிக்கமுடியுமா?

இல்லை, முஸ்லிம்கள் கர்த்தரின் ஜெபத்தை செய்யமுடியாது. 

முதலாவதாக, கர்த்தர் சொல்லித் தந்த முதல் வாக்கியமே, இஸ்லாமின் அஸ்திபாரத்திற்கு எதிரான ஒன்றாகும். அதாவது "பரமண்டலங்களில் உள்ள எங்கள் பிதாவே" என்றுச் சொல்லி முஸ்லிம்கள் ஜெபம் செய்யமுடியாது, ஏனென்றால், முஸ்லிம்கள் ஆவிக்குரிய அனாதைகள், அவர்களுக்கு மேலே வானத்தில் இருப்பது அப்பா அல்ல, அவன் எஜமான். இவர்கள் அவனது பிள்ளைகள் அல்ல, அவனது அடிமைகள். அடிமைகளை அனாதைகள் என்றுச் சொல்வதைத் தவிர வேறு எப்படி அழைக்கமுடியும். அடிமைகளுக்கு எஜமான்கள் இருப்பார்கள், தூக்கி எடுத்து தோளில் சுமக்கும் தந்தை இருக்கமாட்டார். ஒரு வேளை எஜமான் அவர்களை பிள்ளையாக தத்து எடுத்துக்கொண்டால் இதற்கு சாத்தியமுண்டு. ஆனால், இஸ்லாமில் இதற்கும் சாத்தியமில்லை, மகனாக தத்து எடுத்தாலும், தந்து எடுத்த மனிதனைப் பார்த்து, "என் அப்பா" என்று அழைக்கமுடியாது. 

குர்‍ஆன் 33:5. (எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர் களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்; ஆனால் அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர்; (முன்னர்) இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை; ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்); அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

எனவே, முஸ்லிம்கள் கர்த்தரின் ஜெபத்தை செய்யமுடியாது.   ஆனால்,, மற்ற வசனங்களைச் சொல்லி முஸ்லிம்கள் ஜெபம் சொல்லமுடியும். நான் மற்றவர்களை மன்னிக்கிறதுபோல, என்னையும் நீ மன்னிப்பாயா! என்றுச் சொல்லி ஒரு முஸ்லிம் ஜெபம் செய்வதற்கு ஏதாவது தடையுள்ளதா?

ழமையான குர்‍ஆன் கையெழுத்துப் பிரதிகளில் அல்‍ஃபாத்திஹா

1)   சமர்கண்ட் குர்‍ஆன் (Tashkent [Samarqand], Uzbekistan)

சமர்கண்ட் குர்‍ஆன் கையெழுத்துப் பிரதிகளில் அல்ஃபாத்திஹா அத்தியாயம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஸூரா 2:7ம் வசனம் தான் முதல் வசனமாக உள்ளது. [1]

2)   இஸ்தான்புல் குர்‍ஆன் (Topkapi Museum, Istanbul, Turkey)

இஸ்தான்புல் குர்‍ஆன் கையெழுத்துப் பிரதிகளில் "அல்ஃபாத்திஹா" அத்தியாயம் இருக்கிறது, ஆனால் அது பழுதடைந்த பிரதியாக (Fragmented) காணப்படுகிறது. [2]

3)   ஸனா குர்‍ஆன் (Sanaa Manuscripts, Great Mosque of Sana'a in Yemen)

      ஸனா கையெழுத்துப் பிரதிகளிலும் அல்ஃபாத்திஹா ஸூரா இல்லை. [3]\

[1] www.islamic-awareness.org/quran/text/mss/samarqand.html

[2] https://www.islamic-awareness.org/quran/text/mss/topkapi.html
[3] www.islamic-awareness.org/quran/text/mss/soth


திருக்குர்‍ஆன் களஞ்சியம் பொருளடக்கம்