2020 ரமளான்- இஸ்லாம் – கிறிஸ்தவம் சின்னஞ்சிறு கேள்வி பதில்கள் 1000 – ‘அல்லாஹ் & யெகோவா’ பாகம் 5

(2020 ரமளான் தொடர் கட்டுரைகள்)

முந்தைய தொடர் கட்டுரைகளை படிக்க இங்கு சொடுக்கவும். இந்த ஐந்தாவது தொடரில் ‘அல்லாஹ் மற்றும் யெகோவா’ என்ற தலைப்பில் 30 கேள்வி பதில்களைக் காணலம்.

பாகம் 5  - ‘அல்லாஹ் – யெகோவா’ கேள்விகள் பதில்கள் 121 - 150 வரை

கேள்வி 121: அல்லாஹ் தான் யெகோவா என்றால், யெகோவா என்ற வார்த்தை ஏன் ஒருமுறை கூட குர்‍ஆனில் வருவதில்லை? 

பதில் 121: அல்லாஹ் வேறு, யெகோவா வேறு, முஸ்லிம்கள் இவ்விருவர் ஒருவர் என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் பைபிளை அருளிய யெகோவா குர்‍ஆனை அருளவில்லை. இதனால் தான் இவ்விரு வேதங்களும் வெவ்வேறு மூலங்களைக் கொண்டுள்ளது. இவைகளின் செய்திகளில் வித்தியாசம், இவ்விருவரின் குணங்களில் வித்தியாசங்களை காணமுடியும்.

கேள்வி 122: அல்லாஹ்வும் யெகோவாவும் ஒருவரே என்றுச் சொன்னால், ஏன் அல்லாஹ் என்ற பெயரை அவன் ஒரு முறையும் பழைய ஏற்பாட்டில் பயன்படுத்தவில்லை?

பதில் 122: அல்லாஹ் என்பவர், காபாவில் தொழுதுக்கொண்டு இருந்த 360 தெய்வங்களில் ஒருவர் ஆவார். முஹம்மதுவின் காலத்திற்கு முன்பிலிருந்தே மக்கா மக்கள் அல்லாஹ்வையும், இதர விக்கிரகங்களையும் வணங்கிக்கொண்டு இருந்தார்கள். அல்லாஹ்விற்கும், பைபிளுக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை.  அல்லாஹ் என்ற பெயரை ஒரு முறை கூட பைபிளின் தேவன் தனக்கு பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை.

கேள்வி 123: ஒரு முஸ்லிம் அல்லாஹ்வை பிதா/தகப்பன் என்று அழைத்து வேண்டுதல் செய்யமுடியுமா?

பதில் 123: முடியாது, ஒரு முஸ்லிம் தன்னை படைத்ததாகச் சொல்கின்ற அல்லாஹ்வை 'அப்பா' என்று அழைத்து தொழுதுக்கொள்ளவோ, வேண்டுதல் செய்யவோ முடியாது. ஏனென்றால், உலக மக்கள் அனைவரும் அல்லாஹ்வின் அடிமைகள் தான், அவருடைய பிள்ளைகள் அல்ல. அல்லாஹ்வை அப்பா என்று மனதார அழைத்து ஒரு முஸ்லிம் வேண்டுதல்(துவா) செய்தால், அல்லது தொழுதுக்கொண்டால், இஸ்லாமின் படி அவர் ஒரு காஃபிர் ஆகிவிடுவார். தன்னை படைத்தவரை அப்பா என்று அழைத்த பாவத்திற்காக தன் நித்தியத்தை நரகத்தில் கழிக்கவேண்டி வரும் இந்த‌ முஸ்லிம். 

அடேங்கப்பா! அப்பா என்று அழைப்பது எவ்வளவு பெரிய பாவமப்பா!

கேள்வி 124: அல்லாஹ் ஜிப்ரீல் தூதன் மூலமாக மட்டுமே முஹம்மதுவிடம் பேசினான். பல தீர்க்கதரிசிகளோடு நேரடியாக பேசிய அல்லாஹ், ஏன் முஹம்மதுவிடம் ஒரே ஒரு முறை கூட நேரடியாக பேசவில்லை?

பதில் 124: ஆதாமை படைந்த அந்த நாளிலிருந்து முஹம்மதுவிற்கு முன்பு வரை, பல நூற்றாண்டுகள் நபிகளிடமும், மற்ற மக்களிடமும் நேரடியாக பேசிய அல்லாஹ், தன்னுடைய கடைசி நபியாகிய முஹம்மதுவிடம் மட்டும், ஜிப்ரீல் தூதன் மூலமாகவே பேசினான், நேரடியாக பேசவில்லை.  அல்லாஹ்  "தவ்ராத், ஜபூர் மற்றும் இன்ஜீலை" கொடுத்தான் என்று குர்‍ஆன் சொல்கிறது. பழைய ஏற்பாட்டு நபிகள் அனேகரிடம் நேரடியாக பேசினான். ஆனால், குர்‍ஆனை யாருக்கு கொடுத்தானோ அவரோடு அவர் நேரடியாக பேசவில்லை.  ஒரு வேளை, அல்லாஹ் நேரடியாக பேசுவதற்கு முஹம்மதுவிற்கு தகுதியில்லை என்று அல்லாஹ் நினைத்தானா?

அல்லாஹ்விற்கும் யெகோவா தேவனுக்கும் இடையே இருக்கும் வித்தியாசங்களில் இதுவும் ஒரு முக்கியமான் வித்தியாசமாகும்.

கேள்வி 125: அல்லாஹ்விற்கு எத்தனை பெயர்களை குர்‍ஆன் வழிமொழிகின்றது? 

பதில் 125: அல்லாஹ்விற்கு பல அழகான பெயர்கள்  உள்ளன என்று குர்‍ஆன் சொல்கிறது. ஆனால், ஹதீஸ்களில் தான் அல்லாஹ்விற்கு 99 பெயர்கள் உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. 

பார்க்க குர்‍ஆன் 17:110:

17:110. “நீங்கள் (அவனை) அல்லாஹ் என்று அழையுங்கள்; அல்லது அர்ரஹ்மான் என்றழையுங்கள்; எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றன” என்று (நபியே!) கூறுவீராக; . . .

அந்த 99 பெயர்கள் என்னவென்று முஸ்லில்கள் அறிஞர்கள் தொகுத்து இருக்கிறார்கள். இவைகளில் 81 பெயர்கள் தான் அவர்கள் குர்‍ஆனிலிருந்து எடுத்திருக்கிறார்கள்.

கேள்வி 126: முஸ்லிம்கள் அல்லாஹ்வை ஏன் 'அவன் இவன்' என்று மரியாதை குறைவாக குறிப்பிடுகிறார்கள்?

பதில் 126: அல்லாஹ்வை குறிப்பிடும் போது "அவர் இவர்" என்று குறிப்பிட்டால், அது பன்மையை குறிப்பது போன்று ஆகிவிட வாய்ப்பு உள்ளதால், "அவன் இவன்" என்று அல்லாஹ்வை ஒருமையில் முஸ்லிம்கள் குறிப்பிடுகிறார்கள். இப்படி அல்லாஹ்வை அழைப்பதினால் முஸ்லிம்கள் அல்லாஹ்வை அவமதிக்கிறார்கள் என்று அர்த்தமல்ல.

கேள்வி 127: அல்லாஹ்விற்கு உருவம் உண்டா? குர்‍ஆன் என்ன சொல்கிறது?

பதில் 127: குர்‍ஆன் வசனங்களை கவனித்தால், அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்று தான் நாம் கருதவேண்டியுள்ளது.

அல்லாஹ் அமருகிறான்:

ஸூரா 20:5. அர்ரஹ்மான் அர்ஷின் மீது அமைந்தான்.

அல்லாஹ்விற்கு முகம் உண்டு:

ஸூரா 55:27. மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.

அல்லாஹ்விற்கு கைகள் உள்ளன:

ஸூரா 5:64. “அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது” என்று யூதர்கள் கூறுகிறார்கள்; அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்; அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன; . . .

ஸூரா 48:10. நிச்சயமாக எவர்கள் உம்மிடம் பைஅத்து(வாக்குறுதி) செய்தார்களோ, அவர்கள் அல்லாஹ்விடமே பைஅத்(வாக்குறுதி) செய்கின்றனர் - அல்லாஹ்வின் கை அவர்களுடைய கைகளின் மேல் இருக்கிறது;  . . 

அல்லாஹ்விற்கு கண்கள் உண்டு:

ஸூரா 20:39. . . . மேலும், ”(மூஸாவே!) நீர் என் கண் முன்னே வளர்க்கப்படுவதற்காக உம் மீது அன்பைப் பொழிந்தேன்.

அல்லாஹ்விற்கு காதுகள் உண்டு:

20:46. (அதற்கு அல்லாஹ்) “நீங்களிருவரும் அஞ்ச வேண்டாம்; நிச்சயமாக நான் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும், பார்ப்பவனாகவும் உங்களிருவருடனும் இருக்கிறேன்” என்று கூறினான்.

ஒருவருக்கு கண்கள், காதுகள், கை கால்கள் உண்டு என்று சொன்னால், அவருக்கு உருவம் உண்டு என்று சொல்லலாம் அல்லவா? 

இதுமட்டுமல்லாமல், கியாமத் நாளுக்கு பிறகு அல்லாஹ்வை முஸ்லிம்கள் பார்க்கமுடியும் என்றும் ஹதீஸ்கள் சொல்கின்றன.

கேள்வி 128: அல்லாஹ் என்ற தெய்வத்தை முஹம்மதுவிற்கு முன்பும் மக்கா மக்கள் வணங்கிக்கொண்டு இருந்தார்களா? அப்படியானால், எந்த வகையில் அவனை வணங்கினார்கள்?

பதில் 128: ஆம், மக்கா மக்களுக்கு அல்லாஹ்வை முதன் முதலாக முஹம்மது அறிமுகம் செய்யவில்லை, அவர்கள் அல்லாஹ்வை முஹம்மதுவிற்கு முன்பிலிருந்து வணங்கிக்கொண்டு இருந்தார்கள்.

காபா ஆலயத்தில் வைக்கப்பட்டு இருந்த 360 கற்சிலைகளில் அல்லாஹ்வும் ஒருவர், மேலும் அவர் கொஞ்சம் பெரிய சாமி.

கேள்வி 129: அல்லாஹ்விற்கு முன்று பெண் பிள்ளைகள் இருந்ததாக, மக்கள் ஏன் கூறினார்கள்?

பதில் 129: முஹம்மது நபியாக மாறுவதற்கு முன்பு, அல்லாஹ்விற்கு முன்று மகள்கள் இருந்தார்கள், அவர்களையும் சேர்த்து மக்கள் வணங்கிக்கொண்டு இருந்தார்கள்.

இதனை குர்‍ஆனில் அல்லாஹ் சொல்கின்றான். ஆனால், முஹம்மதுவை நபியாக மாற்றிவிட்ட பிறகு, மக்கா மக்களைப் பார்த்து, உங்களுக்கு மட்டும் ஆண் பிள்ளைகளை பெற்றுக்கொள்கிறீர்கள், எனக்கு மட்டும் பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றுச் சொல்கிறீர்களே, இது அநியாயமில்லையா? என்று அல்லாஹ் கோபித்துக்கொள்கிறான்.

ஸூரா 53:19-22

53:19. நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா?

53:20. மற்றும் மூன்றாவதான “மனாத்”தையும் (கண்டீர்களா?)

53:21. உங்களுக்கு ஆண் சந்ததியும், அவனுக்குப் பெண் சந்ததியுமா?

53:22. அப்படியானால், அது மிக்க அநீதமான பங்கீடாகும்.

கேள்வி 130: அல்லாஹ் என்ற பெயர் பைபிளில் உள்ளது என்கிறார்களே, இது உண்மையா?

பதில் 130: பைபிளில் அல்லாஹ் என்ற பெயர் இல்லை. எபிரேய மொழியிலும், கிரேக்க மொழியிலும் தேடினாலும், தேவனின் பெயர் "அல்லாஹ்" என்று பைபிளில் வாசிக்கமுடியாது.

உண்மையில் அல்லாஹ் என்ற பெயர் பைபிளில் இருந்திருந்தால், அதனை முதலில் யூதர்கள் ஏற்றுக்கொண்டு இருந்திருப்பார்கள். இந்த பெயரை ஏன் அவர்கள் மறக்கவோ, மறுக்கவோ போகிறார்கள்? யூதர்கள் தங்கள் தேவனுக்காக எவ்வளவு பக்தி வைராக்கியம் உள்ளவர்கள் என்பதை புதிய ஏற்பாட்டில் காணலாம், மேலும் சரித்திரமும் இதற்கு சாட்சி சொல்கிறது.

கேள்வி 131:  அல்லாஹ் என்ற பெயர் யெகோவாவிற்கு சூட்டப்படாமல் இருந்திருந்தாலும், குறைந்த பட்சம் "அல்லாஹ்" என்ற வார்த்தை பைபிளில் இருந்திருக்குமே?

பதில் 131: இது சரியான கேள்வி, "அல்லாஹ்" என்ற வார்த்தை பைபிளில் உள்ளது, ஆனால் அதன் பொருள் "கர்வாலி மரம்" என்பதாகும். 

'allah (H427)- "கர்வாலி மரம்" - oak tree

இந்த வார்த்தை முழுக்க முழுக்க இஸ்லாமியர்களின் இறைவனுக்கு இருக்கும் "அல்லாஹ்" என்றே உச்சரிக்கப்படுகிறது மற்றும் ஆங்கிலத்தில் நாம் கவனித்தால், இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் அதே எழுத்துக்களை கொண்டுள்ளது. இதன் எண் H427. 

  • அல்லாஹ்  = 'allah 

இவ்வார்த்தையின் பொருள் "கர்வாலி மரம்" என்பதாகும். அல்லாஹ் என்ற எபிரேய வார்த்தையின் பொருள், "கர்வாலி மரம்" என்று உள்ளதால், இனி இஸ்லாமியர்களின் இறைவனுக்கு "கர்வாலி மரம்" என்று பொருள் என்று நாம் கூறலாமா? இஸ்லாமியர்கள் இதற்கு அனுமதி அளிப்பார்களா? 

இஸ்லாமியர்கள் மற்றவர்களின் வேதங்களிலிருந்து வார்த்தைகளை எடுத்து அதை திருத்தி, மாற்றி பொருள் கூறுவது போல அல்லாமல், இந்த வார்த்தை எழுத்துக்கு எழுத்து அப்படியே "அல்லாஹ்" என்று வருகிறது, எனவே, அல்லாஹ் என்றால் கர்வாலி மரம் என்று அர்த்தம்.

இதைக் குறித்து மேலும் அறிய இந்த கட்டுரையை படிக்கவும்: "ஜியாவிற்கு பதில் - "அல்லாஹ்" என்றால் "கர்வாலி மரம்" என்று பொருள்"

கேள்வி 132: அல்லாஹ் என்ற பெயர் அல் + இலா என்ற இரு சொற்களின் கூட்டா? அல்லது அது ஒரு தனிப்பெயரா?

பதில் 132: அல்லாஹ் என்ற பெயர் ஒரு தனிப்பெயர் என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள். ஆனால், அல் + இலாஹ் என்பது தான் பிற்காலத்தில் அல்லாஹ் என்று மாறியதாக ஆய்வுகள் சொல்கின்றன.

  • அல் (AL) என்றால் "The" ஆகும்,
  • இலாஹ் (Ilah) என்றால் "இறைவன் - God" என்பதாகும். 

ஆக, அல்லாஹ் என்றால் "The God” என்று பொருள்.

கேள்வி 133: குர்‍ஆனை படிப்பவர்களுக்கு ஏற்கனவே "அல்லாஹ்" என்றால் யார் என்று தெரிந்திருந்ததா?

பதில் 133: முஹம்மதுவிற்கு குர்‍ஆன் வசனங்களை அல்லாஹ் இறக்கும் போது,  தன்னைப் பற்றி ஒரு அறிமுகத்தை மக்கா மக்களுக்கு கொடுக்கவில்லை, ஏனென்றால், அல்லாஹ் என்ற விக்கிரகத்தை அம்மக்கள் அனைவரும் வணங்கிக்கொண்டு இருந்தார்கள்.

மக்கா மக்களுக்கு அல்லாஹ்வைப் பற்றி நன்கு தெரியும், அவனைப் பற்றி கேள்வி கேட்டால், உடனே அவர்கள் "அல்லாஹ்" என்று பதில் சொல்வார்கலாம். பார்க்க ஸூரா: 29:61, 63, 65:

29:61. மேலும், (நபியே!) “நீர் இவர்களிடத்தில் வானங்களையும், பூமியையும் படைத்துச் சூரியனையும் சந்திரனையும் (தன் அதிகாரத்தில்) வசப்படுத்திருப்பவன் யார்?” என்று கேட்டால், “அல்லாஹ்” என்றே இவர்கள் திட்டமாக கூறுவார்கள்; அவ்வாறாயின் அவர்கள் (உண்மையை விட்டு) எங்கே திருப்பப்படுகிறார்கள்?

29:63. இன்னும், அவர்களிடம்: ”வானத்திலிருந்து நீரை இறக்கி, பிறகு அதனைக் கொண்டு இப்பூமியை - அது (காய்ந்து) மரித்தபின் உயிர்ப்பிப்பவன் யார்?” என்று நீர் கேட்பீராகில்: “அல்லாஹ்” என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள்; (அதற்கு நீர்) “அல்ஹம்து லில்லாஹ் - புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது” என்று கூறுவீராக; எனினும் இவர்களில் பெரும்பாலோர் அறிந்துணர மாட்டார்கள்.  

29:65. மேலும் அவர்கள் மரக்கலங்களில் ஏறிக்கொண்டால், அந்தரங்க சுத்தியுடன் சன்மார்க்கத்தில் வழிப்பட்டவர்களாக அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர்; ஆனால், அவன் அவர்களை (பத்திரமாகக்) கரைக்கு கொண்டு வந்து விடுங்கால், அவர்கள் (அவனுக்கே) இணைவைக்கின்றனர்.

கேள்வி 134: யெகோவா தேவனை பிதா என்று அழைப்பது போன்று, அவரை தாய் (அம்மா) என்று அழைக்கலாமா?

பதில் 134: இந்த பதிலை படிப்பதற்கு முன்பாக, ஒரு முக்கியமான விவரத்தை நாம் மனதில் வைக்கவேண்டும், அது என்னவென்றால், "தேவன் ஆவியாக இருக்கிறார், அதனால் அவருக்கு ஆண்பால், பெண்பால் என்ற பாகுபாடு இல்லை".

பிதாவாகிய தேவன் (Father, The God)” என்று பைபிள் சொல்கிறது, ஆனால் "தாயாகிய தேவன் (Mother, The God)" என்று பைபிள் சொல்வதில்லை. இது பைபிளின் இறையியலும் அல்ல.

பைபிளின் தேவன் தம்மை தந்தையாக, தாயாக, மேய்ப்பனாக, எஜமானனாக, குயவனாக இன்னும் பல உறவுகளில் தம்மை வெளிக்காட்டி மனிதனோடு உறவாடியுள்ளார், அன்பு செலுத்தியுள்ளார், எச்சரித்துள்ளார். உலக மக்களுக்கு அவர்கள் உலகத்தில் காண்கின்ற உறவுமுறைகளோடு (தந்தையாக, தாயாக...) சம்மந்தப்படுத்தி பேசினால்  தான் சத்தியம் புரியும், தேவன் சொல்லவரும் கட்டளைகளின் ஆழம் புரியும்.

இதனை அவர் பல வசனங்களில் வெளிப்படுத்தியுள்ளார். இந்த கேள்வி "தாய்" என்ற ஒரு குறிப்பிட்ட உறவு முறைப்பற்றி கேட்டதால், பைபிளின் தேவன் தன்னை "தாய்" போல வெளிக்காட்டி பேசிய வேத வசனங்களை இங்கு தருகிறேன். அதன் பிறகு "அவரை தாயாகிய தேவன்" என்று அழைக்கலாமா, அழைக்கக்கூடாதா? என்பதை விளக்குவேன்.

a) நான் உன்னை பெற்றேன்:

உபாகமம் 32:18

18. உன்னை ஜெநிப்பித்த கன்மலையை நீ நினையாமற்போனாய்; உன்னைப் பெற்ற தேவனை மறந்தாய்.

b) தாய் தன் பிள்ளையை மறப்பாளா? மறக்கமாட்டாள். அப்படி அவள் மறந்தாலும் நான் உன்னை மறக்கமாட்டேன்:

ஏசாயா 49:14-16

14. சீயோனோ: கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லுகிறாள். 15. ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. 16. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது.

c) ஒரு தாய் தன் பிள்ளையை தேற்றுவது போல தேற்றுவேன்:

ஏசாயா 66:13

13. ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்.

d) தாய் போல நடக்க பழக்குவேன்:

ஓசியா 11:3-4

3. நான் எப்பிராயீமைக் கைபிடித்து நடக்கப் பழக்கினேன்; ஆனாலும் நான் தங்களைக் குணமாக்குகிறவரென்று அறியாமற்போனார்கள். 4. மனுஷரைக் கட்டி இழுக்கிற அன்பின் கயிறுகளால் நான் அவர்களை இழுத்தேன், அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த நுகத்தடியை எடுத்துப் போடுகிறவரைப்போல இருந்து, அவர்கள் பட்சம் சாய்ந்து, அவர்களுக்கு ஆகாரங்கொடுத்தேன்.

e) தாய் போல சிறகுகளுக்குள் மூடுவார்

இவ்வசனங்களில் ஒரு தாய்ப் பறவை தன் சிறகுகளுக்குள் தன் குஞ்சுகளை மூடி அடைக்காப்பதுச் போல சொல்லப்பட்டுள்ளது, ஆனால், ஆண்பால் வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளது (அவர் தமது சிறகுகளாலே).  ஒரு கோழி தன் குஞ்சுகளை தன் சிறகுகளுக்குள் மறைத்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன், ஆனால் சேவல் இப்படி செய்வதை கண்டதில்லை.

 "கழுகு தன் கூட்டைக் கலைத்து" என்ற வசனத்திலும், இது ஆண் கழுகா, பெண் கழுகா என்று நமக்குத் தெரியவில்லை. தாய்க்கழுகும், தந்தை கழுகும் இதைச் செய்யலாம் என்று கருதப்படுகின்றது.

சங்கீதம் 91:4 

4. அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்.

உபாகமம் 32:11-12

11. கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறதுபோல, 12. கர்த்தர் ஒருவரே அவனை வழி நடத்தினார்; அந்நிய தேவன் அவரோடே இருந்ததில்லை.

இது போன்று இன்னும் அனேக வசனங்களில் தேவன் தம்மை ஒரு தாய் போல பாவித்து தம் மக்களோடு பேசியுள்ளார். எனவே, நாம் ஜெபிக்கும் போது "என் தாயும் நீரே, என் தந்தையும் நீரே" என்று சொல்லி ஜெபிப்பதில் தவறில்லை. மற்றவர்களுக்காக ஜெபிக்கும் போதும், "ஒரு தாய் போல அவர்களை தேற்றுங்கள், ஆறுதல் படுத்துங்கள்" என்றுச் சொல்லி ஜெபிக்கலாம், தவறு இல்லை. (உம்மைப் போல அப்பா இல்லே, உம்மைப் போல அம்மா இல்லே, உம்மைப்போல நண்பன் இல்லே, உம்மைப்போல யாரும் இல்லேப்பா என்று பாடலும் பாடலாம், தவறு இல்லை).

ஆனால், "பிதாவாகிய தேவன்(Father, The God)" என்றுச் சொல்வது போன்று "தாயாகிய தேவன் (Mother, The God)" என்ற ஒரு இறையியல் கோட்பாட்டை உருவாக்கக்கூடாது, இறையியல் வேறு, நம்மை அவர் தாய் போல தேற்றுவது என்பது வேறு, இதை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.

பைபிளின் இறையியலைப் பற்றி சுருக்கமாகச் சொல்வதென்றால், நம் தேவன் ஒருவரே தேவன், அவர் பிதாவாக (Father, The God), குமாரனாக (Son, The God) மற்றும்  பரிசுத்த ஆவியானவராக (Holy Spirit, The God) இருக்கிறார். ஆனால், அவர் "தாயாகிய தேவனாக (Mother, The God)" இல்லை. இதனை சரியாக புரிந்துக்கொள்ளவேண்டும்.

 

கேள்வி 135: ஒருவன் என் முகத்தை கண்டு உயிரோடு இருக்கக்கூடாது என்று தேவன் பைபிளில் ஒரு இடத்தில் சொல்லி, ஆனால், வேறு இடத்தில் மூஸாவோடு முகமுகமாய் பேசினார் என்று சொல்கிறாரே, இது முரண்பாடு அல்லவா?

பதில் 135: பைபிளின் வசனங்களை ஆங்காங்கே எடுத்து புரிந்துக் கொள்வதினால் உண்டான‌குழப்பம் இது. சுருக்கமாக, இந்த குழப்பத்தை தீர்க்க முடியுமா என்பதை இப்போது பார்ப்போம்.

தேவன் ஆவியாக இருக்கிறார், அவருக்கு உருவம் இல்லை, அல்லது மனிதன் இதுவரை அவரை பார்த்ததில்லை. ஆனால், பழைய ஏற்பாட்டில் பிதாவாகிய தேவன் பல முறை வெளிப்பட்டு இருக்கிறாரே, அவரை ஆபிரகாம் போன்றவர்கள் பார்த்திருக்கிறார்களே, என்று நீங்கள் கேட்கலாம்.  ஆபிரகாம் போன்றவர்களுக்கு பிதா தம்மை வெளிக்காட்டும்போது, அவர் இருக்கின்ற வண்ணமாக சர்வ மகிமையோடும், பிரகாசத்தோடும்  காட்டவில்லை. அவர் மனித உருவத்தில் வந்தார், அந்த நபரைத் தான் ஆபிரகாம் பார்த்தார். பிதாவாகிய தேவனை அவர் இருக்கின்ற வண்ணமாக (சர்வ மகிமையோடு) பார்க்கின்ற மனிதன் உயிரோடு இருக்கமாட்டான் என்று பைபிள் சொல்கிறது. எனவே, ஆபிரகாம் முதற்கொண்டு யாரும் அவர் இருக்கின்ற வண்ணமாக பார்க்கவில்லை.

இந்த விவரத்தை மோசேயுடன் பேசும் பொது கர்த்தர் சொல்கிறார், தம் முகத்தைக் காட்டாமல், தம் மகிமை கடந்து போன பிறகு, பின்புறத்தை மட்டுமே மோசே பார்க்கும் படி செய்தார். மோசே தேவனின் முகத்தை காணவில்லை.

யாத்திராகமம் 33:20-23

20 நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக் கூடாது என்றார். 21. பின்னும் கர்த்தர்: இதோ, என்னண்டையில் ஒரு இடம் உண்டு; நீ அங்கே கன்மலையில் நில்லு. 22. என் மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகுமட்டும் என் கரத்தினால் உன்னை மூடுவேன். 23. பின்பு, என் கரத்தை எடுப்பேன்; அப்பொழுது என் பின்பக்கத்தைக் காண்பாய்; என் முகமோ காணப்படாது என்றார்.

ஆனால், இதே அத்தியாயம் 9 லிருந்து 11 வசனங்கள் வரை பார்த்தால், மோசேயுடன் முகமுகமாய் தேவன் பேசினார் என்று சொல்லப்பட்டுள்ளதே என்று கேட்கிறீர்களா?

யாத்திராகமம் 33-9-11:

9 மோசே கூடாரத்துக்குள் பிரவேசிக்கையில், மேகஸ்தம்பம் இறங்கி, கூடாரவாசலில் நின்றது; கர்த்தர் மோசேயோடே பேசினார். 10. ஜனங்கள் எல்லாரும் மேகஸ்தம்பம் கூடாரவாசலில் நிற்கக்கண்டார்கள்; ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் பணிந்து கொண்டார்கள். 11. ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்; பின்பு, அவன் பாளயத்துக்குத் திரும்பினான்; நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான்.

மேற்கண்ட வசனங்களை நன்றாக கவனியுங்கள், கூடார வாசலில் மேகஸ்தம்பம் (ஒரு மேகம் போன்ற ஒரு தூண்) நின்றது, கூடாரத்திற்குள் மோசே செல்கிறார். அந்த மேக ஸ்தம்பத்திலிருந்து தேவனுடைய சத்தம் மட்டுமே கேட்டது.

இந்த இடத்தில் முகமுகமாய் பேசுவது என்றால், நண்பர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து பேசுவது போன்று, இந்த இடத்தில் மோசேயும் அந்த மேகஸ்தம்பத்திலிருந்து தேவனும் நண்பர்களைப்போன்று பேசினார்கள், ஆனால் மோசே தேவனின் முகத்தை பார்க்கவில்லை.  தேவனின் சத்தத்தை மட்டுமே மோசே கேட்டார். அதன் பிறகு மோசே தேவனுடைய முகத்தை பார்க்கவேண்டுமென்றுச் சொன்னபோது, நாம் மேலே கண்ட உரையாடல் (வசனங்கள் 20-23) நடக்கிறது.

ஆக, இது முரண்பாடு அல்ல, இது தான் சத்தியம். ஒரே அத்தியாயத்தில் தான் இரண்டு விவரங்களும் கொடுக்கட்டுள்ளது. இந்த யாத்திராகமம் 33வது அத்தியாயத்தை முழுவதுமாக படித்து, அங்கு நடந்த நிகழ்ச்சியை கற்பனையில் கொண்டு வந்து பாருங்கள், உங்களுக்கு தெளிவு உண்டாகும்.

கேள்வி 136: குறுக்குவழி அல்லாஹ் - ரமளான் கடைசி 10 நாட்களில் அல்லாஹ் முஸ்லிம்களோடு ஆடும் சூதாட்டம் என்ன?

பதில் 136: ஆம், அல்லாஹ் அனேக நேரங்களில் முஸ்லிம்களுக்கு ஷாட்கட் குறுக்குவழி கற்றுக்கொடுக்கிறான். முக்கியமாக ரமலானின் கடைசி 10 நாட்களில் குறுக்குவழியாக ஒரு சூதாட்டத்தை அவன் முஸ்லிம்களோடு ஆடியிருக்கிறான்.

குறுக்குவழி என்னும் சூதாட்டம்:

ரமளானின் கடைசி 10 நாட்களில் “லைலதுல் கத்ர்” என்ற ஒரு நாள் வருகிறது. இந்த நாளில் தான் முதன் முதலாக குர்-ஆன் இறக்கப்பட்டது, அதனால் இந்த நாளுக்கு சிறப்புக்கள் அதிகம் என்று இஸ்லாம் சொல்கிறது. இந்த நாளில் ஒரு முஸ்லிம் எதைச் செய்தாலும், அதற்கு அதிக நன்மைகள் உள்ளது என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். ஆனால், அந்த நாள் எது? என்று முஹம்மது சரியாக சொல்லவில்லை, ரமளானின் கடைசி 10 நாட்களில், ஒற்றைப்படை நாளாக அது வருகிறது என்று முஹம்மது கூறியுள்ளார்.

அது என்ன சூதாட்டம் என்று அறிய விரும்புபவர்கள், இந்த கட்டுரையை படிக்கவும்: குறுக்குவழி அல்லாஹ் - ரமளான் கடைசி 10 நாட்களில் அல்லாஹ் முஸ்லிம்களோடு ஆடும் சூதாட்டம்

 

கேள்வி 137: குர்‍ஆனில் என்னை "அல்லாஹ்" என்று அழையுங்கள் என்று அதன் இறைவன் சொல்கிறான், பைபிளில் என்னை 'யெகோவா' என்று அழையுங்கள் என்று அதன் இறைவன் சொல்கிறான்? யார் கேம் விளையாடுவது இங்கே?

பதில் 137: அல்லாஹ் தான் கேம் ஆடுகின்றான். 

யெகோவா தேவனின் புத்தகத்திலிருந்து விவரங்களை எடுத்து தன் புத்தகத்தில் மறுபதிவு  செய்யும் போது தன் பெயர் 'யெகோவா' என்று சொல்லியிருந்தால், வேறு வகையாக ஆய்வு செய்து அவனை ஏற்றுக்கொள்வதோ, புறக்கணிப்பதோ செய்யலாம்.  குறைந்த பட்சம் தனக்கு யெகோவா என்று பெயர் இருந்தது, அதனை 'அல்லாஹ்' என்று மாற்றிவிட்டேன் என்று குர்‍ஆனில்  சொல்லியிருந்தாலாவது, கொஞ்சம் சமாளித்து இருக்கலாம். யெகோவா என்ற பெயர் பற்றி குர்‍ஆனில் அல்லாஹ் மூச்சுவிடாமல் இருந்ததால் தான், இப்போது மூச்சு விடாமல் கிறிஸ்தவர்கள் விமர்சித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

கேள்வி 138: தற்காலத்திலும் அல்லாஹ் அற்புதம் செய்கின்றானா? தக்காளியில், வானத்தில், மரங்களில் அற்புதம் செய்வது உண்மையா? 

பதில் 138: தன்னுடைய கடைசி நபி முஹம்மது வாழ்ந்த போது வானத்திலும் பூமியிலும் அற்புதம் செய்யாத அல்லாஹ், இன்றைய காலத்தில் அனேக அற்புதங்கள் செய்கின்றான் என்று முஸ்லிம்கள் பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

அழுகிக்போகும் தக்காளியில் அற்புதம், வானத்தின் மேகங்களில் அற்புதம், மரங்களில் அற்புதம் என்று பல பொய்யான அற்புதங்களை முஸ்லிம்கள் சொல்கிறார்கள், இவைகளைப் பற்றி கீழ்கண்ட கட்டுரையில் படிக்கவும்:

கேள்வி 139: அல்லாஹ் ஏன் இஸ்மாயீலையும் மக்காவையும் 2500 ஆண்டுகள் மறந்துவிட்டான்? 

பதில் 139: யார் சொன்னது இப்படி? இல்லையே! அல்லாஹ் மக்காவை 2500 ஆண்டுகள் மறக்கவில்லையே என்றுச் சொல்லத்தோன்றுகிறதா?

இப்றாஹீமின் மகன் இஸ்மாயீல் ஒரு நபி (இஸ்லாமின் படி). அவரை மக்கா நகர மக்களுக்கு நபியாக அல்லாஹ் நியமித்தான் (இஸ்லாமின் படி).

அதே நேரத்தில் இஸ்ரெல் நாட்டில் ஈசாக்கை நபியாக்கினான். கி.மு. 1900/2000வது ஆண்டில் இஸ்மாயீலை நபியாக நியமித்த அல்லாஹ், அதன் பிறகு 2500 ஆண்டுகள் மக்காவை மறந்துவிட்டான், இஸ்மாயீல் ஊழியம் செய்த மக்களை மறந்துவிட்டான். காடைசியாக கி.பி. 610ல் முஹம்மதுவை நபியாக மக்கா மக்களுக்கு வழி நடத்த அனுப்பினான்.

ஆனால், இதே காலகட்டத்தில், ஈசாக்கு முதல் இயேசு வரை, பல நபிகளை இஸ்ரேலுக்கு அனுப்பிக்கொண்டே வந்தான். ஏன் இந்த ஓரவஞ்சனை அல்லாஹ்விற்கு? இஸ்ரேல் என்றால் ஒரு விதம், மக்கா என்றால் வேறு விதமா?

ஈசாக்கின் வம்சத்திற்கு, ஒருவருக்கு பின்னால் இன்னொருவர் என்று பல தீர்க்கதரிசிகளை அனுப்பினான் அல்லாஹ், இன்னும் சிலவேளைகளில் ஒரே சமுதாயத்திற்கு ஒரே நேரத்தில் இரண்டு நபிகள் (யஹ்யா மற்றும் ஈஸா). ஆனால் மக்காவிற்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்மாயீல் என்ற ஒரே நபி, அதன் பிறகு கடைசி நபி முஹம்மது, இது அநியாயம் தானே!

இந்த விவரங்களை படங்களாக கீழ்கண்ட கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது பார்க்கவும்:

கேள்வி 140: பைபிளின் தேவன் பழைய ஏற்பாட்டை பாதுகாத்தார் என்று எப்படி நம்புவது?

பதில் 140: ஆம், பைபிளின் தேவன் பைபிளை பாதுகாத்தார் என்று நிச்சயமாகச் சொல்லமுடியும். இதற்கு கிழ்கண்ட சான்றுகளைச் சொல்லலாம்.

1) தேவன் தம் வார்த்தைகளை பாதுகாப்பதாக வாக்கு கொடுத்து இருக்கிறார், பார்க்க: ஏசாயா 55:10-11; 59:21; 1 பேதுரு 1:24-25, மத்தேயு 24:35.

2) இயேசுவும், புதிய ஏற்பாடும் பழைய ஏற்பாட்டை உறுதி செய்துள்ளார்கள், பார்க்க: மத்தேயு 19:4; 22:32,37; 39; 23:35; மாற்கு 10:3௬; லூக்கா 2:23-24; 4:4; 11:51; 20:37; 24:27,44

3) தொல்பொருள் ஆய்வு சான்றுகள்: செப்டாஜின்ட் கிரேக்க மொழியாக்கம் கி.மு. 250 நூற்றாண்டுகளில் நடந்தது. சவக்கடல் சுருள்களில் கி.மு. 100க்கு முற்பட்ட காலத்திற்கான பழைய ஏற்பாட்டு நூல்கள் ஆயிரக்கணக்கில் கிடைத்தன. இயேசுவின் காலத்தில் அராமிக் தர்கம் என்ற யூத விளக்கவுரைகள் பழைய ஏற்பாட்டிற்கு எழுதப்பட்டன. இன்னும் இப்படி சொல்லிக்கொண்டு போகலாம்.

4) இன்னும் முதல் நூற்றாண்டு யூத எழுத்தாளர்களும், இரண்டம் நூற்றாண்டின் கிறிஸ்தவ போதகர்களும், எழுத்தாளர்களும் எழுதிய நூல்களிலிருந்து பழைய ஏற்பாடு பாதுகாக்கப்பட்டு இருந்தது என்பதை அறியலாம். இவைகள் பற்றி பல ஆய்வு கட்டுரைகள் உள்ளன.

முஸ்லிம்கள் இந்த கேள்வியை கேட்டதால், அவர்கள் குர்‍ஆனே தவ்ராத், ஜபூர் பற்றி சாட்சி சொல்கிறது என்பதை அவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டியுள்ளது. தவ்ராத்த்திலும், ஜபூரிலும் நேர்வழியும், ஒளியும் இருக்கிறது என்று குர்‍ஆன் சொல்கிறது.

புதிய ஏற்பாட்டின் பாதுகாப்பு பற்றி தனியாக வேறு கேள்வியில் பார்ப்போம்.

கேள்வி 141: ஏன் பைபிளின் தேவன் ‘லேவி’ என்ற ஒரு வம்சத்தை  தன் ஆலய பணிக்காக வைத்துக் கொண்டார்? அல்லாஹ் இது போல செய்யவில்லையே!

பதில் 141: "பைபிளின் தேவன் தான் எங்கள் அல்லாஹ் என்று" முஸ்லிம்களாகிய நீங்கள் தான் சொல்கிறீர்கள், அதே நேரத்தில் பைபிளின் தேவனை கேள்வி கேட்பதும் நீங்களே! உங்களின் கூற்றுப்படி, லேவி என்ற ஒரு வம்சத்தை  தன் ஆலய ஊழியத்திற்காக அமைத்ததும் அல்லாஹ் என்று அர்த்தமாகின்றதல்லவா?

பழைய ஏற்பாட்டில் ஒரு குறிப்பிட்ட காலகட்டம்வரைக்கும், அதாவது மேசியா வரும்வரை யூதர்களை தம் கட்டுப்பாட்டிற்குள், பரிசுத்தமாக அவர்களை காத்துக்கொள்வதற்காக, சில மார்க்க சட்டங்களையும், ஆலய சட்டங்களையும் தேவன் கொடுத்தார்.

நாட்டை ஆள நியாயாதிபதிகள், அரசர்களை நியமித்தார், அதே போன்று தம் தேவாலயத்தின் சட்டங்களை காக்க, கீழ்படியவைக்க‌ ஒரு குடும்பத்தை நியமித்தார்.  இயேசு வந்த பிறகு திருச்சபை தொடங்கிய பிறகு, லேவி என்ற ஒரு வம்சம் தான் ஊழியக்காரர்களாக வரவேண்டும் என்ற சட்டமில்லை. எனவே, லேவி என்ற ஒரு வ‌ம்சத்தை யூதர்களுக்காக மட்டுமே தேவன் நியமித்தார், அது உலகத்துக்கான பொதுவான சட்டமில்லை.

கேள்வி 142: பைபிளின் தேவன் ஏன் இஸ்ரவேலை மட்டுமே நேசிக்கிறார்?

பதில் 142: இது தவறான புரிதல் கொண்ட கேள்வியாகும். 

யெகோவா தேவன் இஸ்ரவேலை மட்டும் ஏன் நேசித்தார் என்றுச் சொல்வது சரியான கேள்வியல்ல‌, இதற்கு பதிலாக, ஏன் அவர் இஸ்ரவேலை தெரிந்துக்கொண்டார் என்று கேட்பது சரியானதாக இருக்கும். யெகோவா தேவன் உலக மக்களை அனைவரையும் நேசிக்கிறார், ஏனென்றால் அவர் தான் அவர்களை ஒரு மனிதனிலிருந்து படைத்தார்.

இஸ்ரவேலை மட்டும் ஏன் தெரிந்துக்கொண்டார்? ஏன் மற்றவர்களைக்  காட்டிலும் மேன்மையாக்கி வைத்தார்? என்று கேட்டால் அதற்கு காரணம் உண்டு. 

குர்‍ஆனில் இதைப் பற்றி சொல்லப்பட்டதைக் காணுங்கள்: ஸூரா 45:16, 6:86, 17:55

ஸூரா 45:16. நிச்சயமாக நாம், இஸ்ராயீலின் சந்ததியினருக்கு வேதத்தையும், அதிகாரத்தையும், நுபுவ்வத்தையும் கொடுத்தோம்; அவர்களுக்கு மணமான உணவு (வசதி)களையும் கொடுத்தோம் - அன்றியும் அகிலத்தாரில் அவர்களை மேன்மையாக்கினோம்.

ஸூரா 6:86. இன்னும் இஸ்மாயீல், அல்யஸவு, யூனுஸ், லூத் - இவர்கள் யாவரையும் உலகத்திலுள்ள அனைவரிலும் மேன்மையாக்கினோம்.

ஸூரா 17:55. உம்முடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்களைப் பற்றி நன்கு அறிவான்; நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத் திட்டமாக நாம் மேன்மையாக்கியிருக்கிறோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்) கொடுத்தோம்.

யூதர்களுடைய மேன்மை என்ன? அவர்களிடம் வேதம் கொடுக்கப்பட்டது தான் என்று பைபிளும் சொல்கிறது:

ரோமர் 3:1-2

1. இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன?

2. அது எவ்விதத்திலும் மிகுதியாயிருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே.

இன்னொரு மேன்மை என்னவென்றால், அவர்களிடமிருந்து மேசியாவை கொண்டுவர தேவன் திட்டம் போட்டது தான். இதனை இயேசுவே உறுதிப்படுத்தியுள்ளார்:

யோவான் 4:22. நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது.

சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், வேதம் அவர்களிடம் ஒப்புக்கொடுப்பதற்கும், மேசியாவை அவர்களிடமிருந்து பிறக்கவைப்பதற்கும் தான் தேவன் அவர்களை தெரிந்துக்கொண்டாரே தவிர, உலக மக்களை வெறுத்து இவர்களை மட்டுமே நேசிப்பதற்காக அல்ல.

இது மிகவும் ஆழமான ஆய்வு விவரங்கள், தேவைப்படும் போது சின்னஞ்சிறு கேள்விகளாக தகுந்த இடங்களில் பார்ப்போம்.

 

கேள்வி 143: நீங்கள் என்னதான் சொன்னாலும் சரி, யூதர்களை தேவன் அதிகமாக ஆசீர்வதித்திருக்கிறார்? பழைய ஏற்பாட்டில் இதனை காணலாம்.

பதில் 143:  தேவன் இப்றாஹீமை தெரிவு செய்ததற்கு பதிலாக, இந்தியாவில் ஒரு நபரை தெரிவு செய்திருந்தால், அவருடைய சந்ததிக்கு வேதம் கொடுத்து இருந்திருப்பார், மேசியா அங்கிருந்து வந்திருப்பார். எனவே, யூதர்களை மட்டும் தேவன் நேசிக்கிறார், மற்ற‌வர்களை அவர்கள் நேசிப்பதில்லை என்ற கூற்று தவறானது, இதற்கு பல  சான்றுகளை பைபிளிலிருந்து காட்டமுடியும்.

தேவனின் கரங்களில் அதிக துன்பத்தை அனுபவித்தவர்கள் கூட யூதர்கள் தான்:

பழைய ஏற்பாட்டை கூர்ந்து படித்து ஆய்வு செய்தால், யூதர்கள் கர்த்தரின் கரங்களில் பட்ட பாடுகளை கவனிக்கமுடியும். யூதர்கள் தவறு செய்யும் போதெல்லாம், தம் கட்டளைகளை மீறும் போதெல்லாம், மற்ற நாட்டவர்கள் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தார்.

யூதர்கள் மறுபடியும் மனந்திரும்பி கர்த்தரிடம் திரும்பினால், கர்த்தர் அவர்களை இரட்சித்து, எச்சரித்து விடுதலை கொடுத்தார். இது தொடர்ச்சியாக நடந்தது, மேசியாவாகிய இயேசு வந்த பிறகும் கூட, இவர்கள் மனந்திரும்பாத பட்சத்தில், இயேசு இவர்களின் அழிவை, எருசலேம் தேவாலயத்தின் அழிவை தீர்க்கதரிசனமாக கூறினார்.

மாற்கு 13:1-2

1. அவர் தேவாலயத்தை விட்டுப் புறப்படும்போது, அவருடைய சீஷர்களில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, இதோ, இந்தக்கல்லுகள் எப்படிப்பட்டது! இந்தக் கட்டடங்கள் எப்படிப்பட்டது! பாரும் என்றான்.

2. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இந்தப்பெரிய கட்டடங்களைக் காண்கிறாயே, ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்றார்.

கர்த்தரின் கரங்களிலிருந்து அதிகமான ஆசீர்வாதங்களை பெற்றவர்களும் யூதர்கள் தான், அவர் மூலமாக அதிகமான துன்பங்களை அனுபவித்தவர்களும் யூதர்கள் தான். துன்பங்களுக்கு காரணம் அவர்களின் கீழ்படியாமை தான்.

யூதர்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்திற்கு காரணம், "வேதமும், மேசியாவும்" அவர்களுக்கு கொடுத்ததாகும். இந்தியர்களுக்கு அவர் “வேதமும் மேசியாவும்” கொடுத்து இருந்திருந்தால், இதே நிலையில் நாமும் இருந்திருப்போம்.

சரி, ஒரு சிறிய குறிப்பு: இன்றைக்கு யூதர்கள் உலகத்துக்கு ஆசீர்வாதமாக இருக்கிறார்களா? மருத்துவ துறையில் மற்றும் இதர துறைகளில் யூதர்களின் பங்கு என்னவென்று சிறிது ஆய்வு செய்து பாருங்களேன், உண்மை என்னவென்று புரியும்.

கேள்வி 144: அல்லாஹ்விற்கு இருக்கும் 99 பெயர்களில் ஏன் "பிதா" என்ற பெயர் இல்லை?

பதில் 144: அல்லாஹ்விற்கு இருக்கும் 99 பெயர்களில் "பிதா, அப்பா" என்ற பெயர் மட்டும் அவருக்கு இல்லை.

இயேசு தேவனை அழைக்கும்  போது, பிதாவே என்று அழைத்தார், சீடர்களுக்கு பிதாவே என்று அழைத்து ஜெபிக்கும் படி கற்றுக்கொடுத்தார் (மத்தேயு 6:9).

இன்று முஸ்லிம்கள் நாங்கள் இயேசுவை நேசிக்கிறோம், அவரை விசுவாசிக்கிறோம் என்றுச் சொல்கிறார்கள், ஆனால், அவரது போதனையின்படி முஸ்லிம்கள் செய்கிறார்களா? இயேசு சீடர்களுக்கு கற்றுக்கொடுத்தது போன்று, "பிதாவே என்று அழைத்து, இறைவனை தொழுதுக்கொள்ளமுடியுமா"?

இல்லை, இது எங்களால் முடியாது என்று நீங்கள் சொல்வதாக இருந்தால், நீங்கள் உண்மையான இயேசுவை விசுவாசிக்கவில்லை என்று பொருள்.

அல்லாஹ் பிதா ஆகமுடியாது, இதனால் அல்லாஹ் யெகோவா ஆக முடியாது.

கேள்வி 145: அல்லாஹ் யாருக்கும் தகப்பன் ஆகமுடியாது, சரி ஒப்புக்கொள்கிறோம், ஆனால், ஏன் முஹம்மது யாருக்கும் தகப்பன் ஆகமுடியாது?

பதில் 145:  மேலே கண்ட பதில்களில் 'அல்லாஹ் யாருக்கும் பிதா ஆகமுடியாது' என்பதைக் கண்டோம். ஏனென்றால், அல்லாஹ் "நீங்கள் என் அடிமைகள், நான் எஜமான்" என்று சொல்லிவிட்டான் எனவே அதனை ஏற்றுக்கொள்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்.

ஆனால், முஹம்மது மக்களுக்கு குறைந்தபட்சம் முஸ்லிம்களுக்கு ஏன் பிதா ஆகமுடியாது? ஒரு ஆன்மீகத் தலைவர், எல்லோருக்கும் குருவாகவும், பிதாவாகவும், ஒரு குடும்ப தலைவராகவும் இருப்பார் அல்லவா? 

ஸூரா  33:40. முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.

முஹம்மது முஸ்லிம்களுக்கு தகப்பன் என்று சொல்வதில் என்ன அல்லாஹ்விற்கு சங்கடம்?

சஹாபாக்களுக்கு முஹம்மது பெரிய துணை அல்லவா? தலைவர் அல்லவா? அவர்கள் குடும்பங்களுக்கு மூத்த தலை அல்லவா? ஒரு வேளை சஹாபாக்கள் மரித்த பிறகு, அவர்களின் குடும்ப நபர்களுக்கு (மனைவிக்கு, பிள்ளைகளுக்கு) ஒரு சகோதரனாக, பெரியப்பாவாக, சித்தப்பாவாக மாறி, அவர்களை இவர் தாங்கமாட்டாரா?  தகப்பன் செய்கின்ற உதவிகளை அந்த குடும்பத்துக்குச் செய்யவேண்டாமா?

சஹாபாக்களுக்கு முஹம்மது தகப்பன் ஆகமுடியாது என்று குர்‍ஆன் சொல்வதில் ஏதோ ஒரு வெளியே சொல்லமுடியாத இரகசியம் அடங்கியிருக்கிறது.

ஒருவேளை, சஹாபாக்கள் மரணித்தால், அவர்களின் மனைவிகளை முஹம்மது திருமணம் செய்ய வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்று அல்லாஹ் பயந்து, இப்படிப்பட்ட குர்‍ஆன் சட்டத்தை இறக்கிவிட்டனா? 

முஸ்லிம்களே, சிந்தியுங்கள் அடிமைத் தனத்திலிருந்து விடுதலை பெறுங்கள்.

கேள்வி 146: சொர்க்கம் போவதற்கு அல்லாஹ்வின் வழி என்ன? யெகோவாவின் வழி என்ன?

பதில் 146: உலகில் எந்த ஒரு மதத்தை எடுத்துக்கொண்டாலும், நித்தியஜீவன், நிர்வாணா, சொர்க்கம் என்று மரணத்திற்கு பிறகு நாம் எங்கே இருக்கப்போகிறோம் என்பதைப் பற்றி கூறுகின்றன.

சொர்க்கத்திற்கு போவதற்கு அல்லாஹ்வின் வழி: 

எனக்கு கீழ்படி, நல்ல காரியங்களைச் செய், நீ சொர்க்கத்திற்கு போவதற்கான டிக்கெட்டை நீயே சம்பாதித்துக் கொள். நீ சரியாக செய்யவில்லையென்றால் உன் டிக்கெட்டு கிழிந்துவிடும், உனக்கு சொர்க்கம் செல்வதற்கான வாசல் திறக்கப்படாது.

சொர்க்கத்திற்கு போவதற்கு யெகோவா காட்டிய வழி: 

சொர்க்கம் செல்வதற்கு உன் முயற்சி வீண். உன்னால் 100%  பரிசுத்தமாக வாழ முடியாது. உனக்காக நான் வழியை உண்டாக்கி இருக்கிறேன். உன் இடத்தில் என் வார்த்தையை மேசியாவாக அனுப்பி, எல்லாவற்றையும் நிறைவேற்றியுள்ளேன். நீ செய்யவேண்டியதெல்லாம் ஒன்று தான். என் மேசியா மீது நீ நம்பிக்கை வைக்கவேண்டும். அதன் பிறகு என்னுடைய ஆவியை உனக்கு உதவி செய்ய அனுப்பியுள்ளேன், அவருடைய துணையுடன் உன்னால் முடிந்த அளவிற்கு நல்ல குடிமகனாக, பரிசுத்தமான வாழ்க்கை வாழு. கடைசிவரை என்னில் நிலைநின்று மரித்தால், நீ என்னோடு பரலோகில் நித்திய காலமாக இருப்பாய்.

இதில் எது கடினம்? எது நியாயம்? எது அறிவுடமை?

முஸ்லிம்களின் சிந்தனைக்கு: இந்த ஒரு கேள்விகளை நீங்கள் கேட்டுப்பார்த்து, அதற்கு பதிலை நீங்களே கொடுங்கள்.  நான் செய்யும் அனைத்து நல்ல காரியங்களும், என் வாழ்நாளின் அனைத்து தொழுகைகளும், நான் சொர்க்கம் செல்ல போதுமானதாக இருக்குமா? அல்லாஹ் தராசில் என் நன்மைகள் தீய காரியங்களை வைக்கும் போது, என் நன்மைகள் என் தீய காரியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமா? பூமியில் இருக்கும் போதே எனக்கு சொர்க்கத்திற்குச் செல்வேன் என்ற நம்பிக்கை உண்டா? அல்லது அந்த முடிவை என மரணத்திற்கு பிறகு தான் எடுக்கப்படும் என்று எண்ணுகின்றீர்களா?

கேள்வி 147: ஆதாமை வணங்கும்படி(ஸுஜூது) செய்யும் படி அல்லாஹ் இப்லீஷுக்கு கட்டளையிட்டானா?

பதில் 148: ஆம், ஸூரா18:50ல் அல்லாஹ் கூறியுள்ளான்.

18:50. அன்றியும், “ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்” என்று நாம் மலக்குகளிடத்தில் கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக; அப்போது இப்லீஸைத்தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; அவன் தன் இறைவனுடைய கட்டளையை மீறி விட்டான்; ஆகவே நீங்கள் என்னையன்றி அவனையும் அவன் சந்ததியாரையும் (உங்களைப்) பாதுகாப்பவர்களாக எடுத்துக் கொள்வீர்களா? அவர்களோ உங்களுக்குப் பகைவர்களாக இருக்கிறர்கள்; அக்கிரமக்காரர்கள் (இவ்வாறு) மாற்றிக் கொண்டது மிகவும் கெட்டதாகும்.

மனிதனை வணங்குவதினால், அல்லாஹ்விற்கு என்ன நன்மை உண்டாகும்? மலக்குகளுக்கு ஜின்களுக்கு என்ன நன்மை? போகட்டும் ஆதாமுக்கு என்ன நன்மை உண்டானது?

மண்ணால் படைக்கப்பட்ட மனிதனை வணங்கும்படி மலக்குகளுக்கு ஏன் அல்லாஹ் கட்டளையிட்டான் என்ற காரணத்தை குர்‍ஆனில் காணமுடியாது. யாராவது இதற்கு பதில் சொல்லமுடியுமா?

கேள்வி 148:  குர்‍ஆனில் எந்த வசனத்தில் அல்லாஹ் 'கத்னா, சுன்னத்து' செய்யவேண்டும் என்று கட்டளையிட்டுள்ளான்?

பதில் 148: குர்‍ஆனில் எந்த ஒரு வசனத்திலும் முஸ்லிம்கள் கத்னா என்கின்ற விருத்தசேதனம் செய்யவேண்டும் என்று கட்டளையிடப்படவில்லை.

கேள்வி 149: அல்லாஹ்விற்கு ஒற்றைப்படை எண்கள் என்றால் பிடிக்குமா?

பதில் 149: ஆமாம், அல்லாஹ்விற்கு ஒற்றைப்படை எண் என்றால் பிடிக்குமாம், அதற்காகத்தான் அனேக விஷயங்களை முஹம்மது ஒற்றைப்படையில் செய்யச் சொன்னாரோ!

ஸஹீஹ் புகாரி  எண்: 6410. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது நூற்றுக்கு ஒன்று குறைவான - பெயர்கள் உண்டு. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் யாரும் சொர்க்கம் நுழையாமல் இருப்பதில்லை. அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

லைலத்துல் கத்ர் இரவை எங்கு தேடுவது: 

ஸஹீஹ் புகாரி  எண்:  2017. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ஆனால், சத்தியம் செய்யும் போது அல்லாஹ் இரட்டை மற்றும் ஒற்றையின் மீது செய்வான்:

ஸுரா 89:3. இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக,

அப்படியானால், ஒற்றை (1,3,5,7,9)  மற்றும் இரட்டை(2,4,6,8) இரண்டையும் சேர்த்தால், எல்லா எண்களும் வந்துமிடுமல்லவா? அப்படியானால், அல்லாஹ் 'எண்கள் மீது சத்தியமாக' என்று சொல்லியிருந்தாலே போதுமானதாக மாறியிருக்குமே!  நல்ல கேள்வி தான், ஆனால் பதிலை முஸ்லிம்களிடமிருந்து தான் வரவேண்டும்.

கேள்வி 150: எல்லாவற்றிற்கும் முந்தியவனும், பிந்தியவனும் யார்? குர்‍ஆன் 57:3

பதில் 150: குர்‍ஆன் 57:3ல் 'எல்லாவற்றிற்கும் முந்தியவனும், பிந்தியவனும்' அல்லாஹ் என்று சொல்லப்பட்டுள்ளது.

ஸூரா 57:3. (யாவற்றுக்கும்) முந்தியவனும் அவனே; பிந்தியவனும் அவனே; பகிரங்கமானவனும் அவனே; அந்தரங்கமானவனும் அவனே; மேலும், அவன் அனைத்துப் பொருள்களையும் நன்கறிந்தவன்.

இதே வார்த்தைகள் யெகொவா தேவனுக்கும், பயன்படுத்தப்பட்டு இருப்பதில் ஆச்சரியமில்லை. ஏனென்றால் முதலாவது பைபிளின் தேவன் இது தம்முடைய தகுதி என்றார், அதன் பிறகு வந்த குர்‍ஆனில் இது அல்லாஹ்விற்கு போடப்பட்டுள்ளது.

வெளி 1:8 

8. இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.

ஆனால், இதே பெயர் இயேசு தமக்கும் சூட்டிக்கொண்டது தான் கவனிக்கப்படத்தக்கது: 

கீழ்கண்ட வசனங்களைக் காண்க:

வெளி  1:17

17. நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;

வெளி   21:6

6. அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்.

வெளி 22:12-13

12. இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. 13. நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.

யெகோவா தேவன் முந்தினவரும், பிந்தினவருமாக இருக்கிறார். இயேசு முந்தினவரும், பிந்தினவருமாக இருக்கிறார்.

தேதி: 1st May 2020


2020 ரமளான் தொடர் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள் பக்கம்