அம்மாவின் நிர்வாகம், அல்லாஹ்வின் நிர்வாகம் – அடுத்த தலைவர் யார்?

ஒரு ஆடு தளபதியாக இருக்கும் சிங்கங்களின் இராணுவத்திற்கு நான் பயப்படமாட்டேன், ஆனால், ஒரு சிங்கம் தளபதியாக இருக்கும் ஆடுகளின் இராணுவத்திற்கு நான் பயப்படுகிறேன் என்று மகா அலேக்சாண்டர் கூறியதாகச் சொல்வார்கள். ஒரு சிறந்த தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தை இந்த கூற்று எடுத்துக்காட்டுகின்றது.  

டிசம்பர் 5ம் தேதி, 2016ம் ஆண்டு நம் மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்கள் காலமானார்கள். ஒரு சிறந்த நிர்வாகி மற்றும் பல ஆண்டுகளாக அஇஅதிமுக கட்சியை கட்டிக்காத்துக்கொண்டு வந்திருக்கிறார்கள். இவருக்கு அடுத்தபடியாக இக்கட்சியை இவரைப்போலவே நிர்வாகம் செய்யும் அடுத்த தலைவர் தேவைப்படுகின்றார். இக்கட்சி அடுத்த 10 ஆண்டுகளில் எந்த நிலையில் இருக்கும் என்பதை, அடுத்த தலைவரின் நிர்வாகத் திறமை மீது சார்ந்துள்ளது. சிறந்த தலைவர்கள் தங்களுக்கு பிறகு தாங்கள் உருவாக்கிய ஸ்தாபனங்கள், கட்சிகள் அல்லது இயக்கங்களை செவ்வனே நடத்துவதற்கு ஏற்ற சிறந்த தலைவர்களை உருவாக்கவேண்டும், அவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்துவிடவேண்டும். திரு எம்ஜிஆர் அவர்கள் ஒரு சிறந்த தலைவியை தன் கட்சிக்கு கொடுத்துவிட்டுச் சென்றார். இதனால் இந்நாள்வரை அவரது கட்சி வாழ்ந்துவந்துள்ளது. இதே போல, மாண்புமிகு ஜெயலலிதா அவர்களும் தனக்கு பிறகு யார் அந்த கட்சியை நடத்துவார் என்ற முடிவை, கட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்கு அறிவித்து இருந்திருப்பார் என்று நாம் நம்பலாம். இதோடு தமிழ் நாட்டு அரசியல் பற்றி எழுதுவதை நிறுத்திக்கொள்கிறேன். எதிர்பாராத  விதமாக மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் காலமான செய்தி எனக்கு இஸ்லாமின் தலைசிறந்த தலைவர் முஹம்மதுவை ஞாபகப்படுத்தியது. 

இன்றிலிருந்து 1400 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் அது. 

சிறந்த தலைவன் யார்?

உலகத்தின் பல வெற்றிகரமான சாம்ராஜ்ஜியங்கள் சரித்திர ஏடுகளிலிருந்து காணாமல் போனதற்கு முக்கிய காரணம், சரியான நிர்வாகத் திறமையில்லாத தலைவர்கள் ஆட்சி செய்ததால் தான்.  எவன் ஒருவன் அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்குகின்றானோ, அவனே சிறந்த தலைவன் எனப்படுவான். தன் வாழ்நாள் முழுவதும் தொண்டர்களை தொண்டர்களாகவே வைத்திருப்பவன், தனக்கு பிறகு குழி தோண்டி தன் கட்சியை/இயக்கத்தை புதைப்பதற்கு சமமான காரியத்தை செய்பவன் ஆவான். 

இச்சிறிய கட்டுரையில், இஸ்லாமின் ஸ்தாபகரும், சிறந்த தலைவராகவும் திகழ்ந்த முஹம்மது அவர்கள் தனக்கு பிறகு தன் ஸ்தானத்தில் யார் தலைவர் பதவியில் உட்காரவேண்டும் என்ற முடிவை எடுத்தாரா இல்லையா? என்பதை ஆய்வு செய்யப்போகிறோம். 

முஹம்மதுவின் திடீர் மரணம்

இஸ்லாம் என்ற நாணயத்திற்கு (காசைச் சொல்கிறேன்) இரண்டு பக்கங்கள் உள்ளன, ஒரு பக்கம் ஆன்மீகம், அடுத்த பக்கம் ஆட்சி அதிகாரம், ஒரு பக்கம் அவ்வுலகம், அடுத்த பக்கம் இவ்வுலகம்.  இஸ்லாமின் தலைவராக (கலிஃபாவாக) நியமிக்கப்படுபவர் ஆன்மீக தலைவராகவும், அதே நேரத்தில் நாட்டின் ஆட்சித் தலைவராகவும் செயல்படுவார். நாம் வாழும் இக்காலத்தில் அரசாங்கத்தை நடத்த வெறும் ஆட்சித்தலைவரை நியமித்தால் போதுமானது, ஆனால், இஸ்லாமைப் பொருத்தமட்டில், அதே நபர் ஆன்மீகத்தலைவராகவும் இருக்கவேண்டும், எனவே, இதில் தவறு நடந்தால், நாடு அழியும். 

இஸ்லாம் பற்றி சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், முஹம்மதுவின் மூலமாக அல்லாஹ் இஸ்லாமிய ஆட்சியை ஸ்தாபித்தான், இதன் ஒரு பாகம் ஆன்மீகம் ஆகும். இருபத்தி மூன்று ஆண்டுகள் முஹம்மது ஒரு ஆன்மீக தலைவராகவும், (சில ஆண்டுகள்) நாட்டுத் தலைவராகவும் இஸ்லாமை கட்டிக்காத்தார். இதற்கு அல்லாஹ்வின் அருட்கொடையும், போர்கள் மூலமாக கிடைத்த பொருட்கொடையும் அளவில்லாமல் இருந்தது. இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இருக்கவேண்டியவர், ஆனால், யாரும் எதிர்ப்பார்க்காத விதமாக, முஹம்மது சுகவீனமானார், ஒரு நாள் அவரது உயிரை அல்லாஹ் அபகரித்துக்கொண்டான். 

தனக்கு பிறகு யார் ஆன்மீகத்தலைவராகவும், நாட்டுத்தலைவராகவும் இருக்கவேண்டும் என்று முஹம்மது சொல்லியிருந்தாரா? தொண்டர்கள் அனைவருக்கும் அடுத்த தலைவர் யார் என்றுத் தெரியுமா? முஹம்மதுவின் மரணத்துக்கு முன்பே அதிகார பூர்வமாக தலைவர் பற்றிய அறிக்கையை முஹம்மது செய்திருந்திருந்தாரா?

நாற்காலிக்காக சண்டைபோடும் ஆன்மீக பழுத்த பழங்கள்

ஒரு பக்கம் முஹம்மது மரித்த சோகம் மக்களின் உள்ளத்தில் சொல்லொன்னா வேதனையை உண்டாக்கியிருந்தது, இன்னொரு பக்கம், தலைவர்கள் நாற்காலிக்காக சண்டை போட ஆரம்பித்துவிட்டார்கள். இந்த நாற்காலிச்சண்டை அவர் மரித்த அதே நாள் நடந்தது என்பது வேதனைக்குரிய செய்தியாகும்.

அ) அன்சாரிகள் என்று அழைக்கப்பட்ட மதினாவாசிகள் தங்கள் இனத்திலிருந்து ஒரு தலைவரை நியமிக்க கூட்டம் கூடிவிட்டார்கள்.

ஆ) மக்காவாசிகளான குறைஷிகள் தங்கள் இனமக்கள் தான் இஸ்லாமுக்கு தலைமை தாங்கவேண்டும் என்று விரும்பினார்கள். 

இ) இவ்விரு கூட்டத்தினரும் ஒன்று கூடி பேசியும் பயனில்லை. மதினா தலைவர்கள் ஒரு ஆலோசனைச் சொன்னார்கள், இரண்டு தலைவர்களை நியமிப்போம், உங்களில் ஒருவர் எங்களில் ஒருவர். ஆனால், இதனை மக்காவினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஈ) அபூ பக்கர், மற்றும் உமர் என்பவர்கள் முஹம்மதுவிற்கு பெண் கொடுத்த மாமனார்கள் ஆவார்கள்.  உஸ்மான் மற்றும் அலி என்பவர்கள் முஹம்மதுவின் மகள்களை திருமணம் செய்திருந்த மருமகன்மார்கள். இவர்கள் அனைவரும் மக்காவினராவார்கள்.

உ) ஜுபைர் என்ற முஹம்மதுவின் தோழர், தன் வாளை உறுவி, அலிக்கு ஆதரவு கிடைக்கும் வரை இதை உறையில் போடமாட்டேன் என்றுச் சொன்னார். ஜுபைரை கல்லால் அடித்து வாளை பிடுங்கு என்று உமர் கூறினார். இவர்கள் அனைவரும் தற்கால முஸ்லிம்களின் படி, இஸ்லாமிய ஆன்மீகத்தில் பழுத்த பழங்கள்.

ஊ) அபூ சுஃப்யான் என்ற இன்னொரு முஸ்லிம், இங்கு தலைகள் உருளும் சூழல் உள்ளது என்றார், வாளை சுழற்றவேண்டிய சரியான வேளைக்காக காத்திருந்தார். 

எ) நிலைமை தலைக்கு மேலே போகிறது என்பதை உணர்ந்த உமர், புத்திசாலித்தனமாக மிகவும் தைரியமாக தன் ஆதரவு அபூ பக்கருக்கு என்று கூறினார். வேறு வழியின்றி ஒவ்வொருவரும் ஆதரவு அளித்தனர். 

ஏ) அலிக்கு தான் தலைவராகவேண்டுமென ஆசை இருந்தது, இரத்தம் சிந்த இது சமயமல்ல என உணர்ந்தவராக, தன் ஆதாரவையும் அபூ பக்கருக்கு கொடுத்தார். பாவன் இவர், இப்படிப்பட்ட ஆதரவை அவர் மூன்று முறை கொடுக்கவேண்டி இருந்தது. கடைசியாக நான்காவதாக இவர் தலைவரானார். 

ஐ) அபூ பக்கர் தலைவராக வருவதை அபூ சுஃப்யான், விரும்பவில்லை. குறைவான வம்சத்தில் வந்த அபூ பக்கரா எங்களுக்கு தலைவராவது? ஜாதிவெறி அவரை ஆட்டிப்படைத்தது.  அலியிடம் பேசிப்பார்த்தார், ஒன்றும் நடக்கவில்லை. 

ஒ) மதினாவினரும் விருப்பமில்லாமல் தங்கள் ஆதரவை கொடுத்தார்கள். 

இவைகள் எல்லாம், முஹம்மது மரித்த அதே நாள் அரங்கேரியது.

இக்குழப்பத்திற்கு யார் காரணம்?

அல்லாஹ்வும் முஹம்மதுவும் தான் இந்த குழப்பத்திற்கெல்லாம் காரணம். 

பெண்களின் மாதவிடாய் முதற்கொண்டு, தேவையில்லாத அனைத்துவித கேள்விகளுக்கு பதில் கொடுத்த முஹம்மது, தனக்கு பிறகு யார் தலைவராக வரவேண்டும்? தலைவர்களை எப்படி நியமிக்கவேண்டும்? போன்ற விவரங்களைச் சொல்லிவிட்டுச் சென்று இருந்திருக்கலாம். ஆனால், இதைப் பற்றி முஹம்மது விளக்கமளிக்கவில்லை.

அற்பமான விஷயங்களுக்கெல்லாம் ‘வெளிப்பாடுகளை, அதாவது குர்-ஆன் வசனங்களை இறக்கிய அல்லாஹ்’ ஒரு தலைவனை எப்படி நியமிக்கவேண்டும் என்றுச் சொல்ல மறந்துவிட்டான்.

ஆராயிரத்துக்கும் அதிகமான வசனங்களையும் (6236), பல ஆயிர ஹதீஸ் விவரங்களையும் இறக்கிய அல்லாஹ்விற்கு முஹம்மதுவிற்கு அடுத்தபடியாக வரும் தலைவர்களை எப்படி நியமிக்கவேண்டும் என்பதை விளக்கும் 10 வசனங்களை இறக்கமுடியவில்லை.

முஹம்மது தனக்கு பிறகு தலைவர்களை எப்படி நியமிக்கவேண்டும் என்ற விவரங்களைச் சொல்லாமல் மரித்தபடியினால் உண்டான இழப்புக்களை இஸ்லாமின் ஆரம்பகால 50 ஆண்டுகால சரித்திரத்தில் காணலாம்.

அல்லாஹ்வும் முஹம்மதுவும் செய்த மிகப்பெரிய தவறினால், முஹம்மதுவின் பேரப்பிள்ளைகளும் குடும்பமும் பரிதாபமாக கொல்லப்பட்டார்கள். முஹம்மதுவின் மருமகனார் உஸ்மான் அவர்கள் முஸ்லிம்களால் கொல்லப்பட்டார், அதே முஸ்லிம்களால் இன்னொரு மருமகனார் அலி அவர்களும் கொல்லப்பட்டார்கள். 

அல்லாஹ் இறைவனா? 

”அல்லாஹ் தான் பைபிளின் தேவன்” என்று குர்-ஆன் சொல்கிறது. அடுத்த தலைமுறை தலைவர்களை நியமிக்கும் இந்த குணத்தை பார்க்கும் போது, நிச்சயமாக அல்லாஹ் பைபிளின் தேவனாக இருக்கமுடியாது என்று சொல்லமுடியும். 

மோசேயின் வாழ்வு எப்படி எப்போது முடிவடையும்? அடுத்தபடியாக, யார் தலைவராக வரவேண்டும்? போன்றவற்றை பைபிளின் தேவன் முடிவு செய்து, அதனை ஒரு அழகான முறையில் செயல்படுத்தினார். ஆனால், முஹம்மது எப்படி எப்போது மரிப்பார் என்று தெரியாதவராக அல்லாஹ் காணப்படுகிறார்.  இஸ்லாமின் சரித்திரத்தை கூர்ந்து ஆய்வு செய்தால், இந்த முடிவிற்குத் தான் வரமுடியும். 

  1. மோசே மரிப்பது பற்றிய செய்தியை தேவன் மோசேக்கு அறிவிக்கிறார்.[1]
  2. ஒரு சிறந்த தலைவனை தெரிவு செய்யுங்கள் என்று மோசே வேண்டுகிறார்.[2]
  3. யோசுவாவை தெரிவு செய்யும்படி தேவன் கட்டளையிடுகிறார்.[3]
  4. யோசுவாவை மக்களுக்கு முன்பாக கொண்டுச்சென்று, அவனுக்கு அதிகாரம் மற்றும் கனம் கொடு என்று தேவன் கட்டளையிட்டார்.[4]
  5. யோசுவா ஒரு விஷயத்திற்காக எப்படி முடிவு எடுக்கவேண்டும் என்பதைப் பற்றிய கட்டளையை தேவன் கொடுக்கிறார்.[5]
  6. இதர இடங்களில் மோசே யோசுவாவிற்கு அறிவுரைகள், கட்டளைகள் மற்றும் உற்சாக வார்த்தைகளை கொடுத்தார்.[6]
  7. கடைசியாக, மோசே மரித்தபிறகு, தேவன் நேரடியாக யோசுவாவை வழி நடத்துகிறார், உற்சாகப்படுத்துகிறார், வெற்றியுள்ள தலைவனாக இருக்கவேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். [7]

அடுத்தபடியாக, புதிய ஏற்பாட்டிலும், இயேசு தனக்கு பிறகு யார் தன் திருச்சபைக்கு தலைமை தாங்கவேண்டும் என்பதை தன் சீடர்களுக்கு விளக்கிவிட்டுச் சென்றார். இயேசுவின் உள்வட்ட சீடர்களில் பேதுரு, யோவான் போன்றவர்கள் தலைவர்களாக செயல்பட்டபோது, இதர சீடர்கள் அதனை ஆமோதித்தார்கள், முஹம்மதுவின் சீடர்களைப்போல, வாளை ஏந்தி இரத்தம் சிந்த துடிக்கவில்லை. 

இதிலிருந்து அறிவது என்னவென்றால், அல்லாஹ் பைபிளின் இறைவனல்ல என்பதாகும். வீணான பயனில்லாத விஷயங்களுக்கெல்லாம் வசனங்களை இறக்கிய அல்லாஹ், தலைவர்களை எப்படி நியமிப்பது? அவர்களை ஆட்சியிலிருந்து எப்படி நீக்குவது போன்றவற்றையெல்லாம் சொல்லாமல், முஹம்மதுவை எடுத்துக்கொண்டது, அல்லாஹ்வின் தெய்வீகத்தன்மையை கேள்விக்குரியக்குகிறது.

முடிவுரை: 

ஆரம்பகால இஸ்லாமிய சரித்திரத்தைபோன்று, தமிழ்நாட்டின் அஇஅதிமுக கட்சி அல்லல்படக்கூடாது என்று விரும்புகிறேன். நல்ல நிர்வாகத்திறமையுள்ள தலைவர்கள் நாட்டுக்கும், வீட்டுக்கும் தேவை. 

இஸ்லாமிய ஆரம்பக்காலத்தை, அதாவது முதல் நான்கு கலிஃபாக்களின் ஆட்சியை முஸ்லிம்கள் “இஸ்லாமின் பொற்காலம்” என்றுச் சொல்வார்கள், ஆனால் இது பச்சைப்பொய்யாகும். மூன்றாவது கலிஃபா உஸ்மான் அவர்கள் தன் தலைமையகத்தில், முஸ்லிம்களால் மிகவும் கொடுமையாக கொல்லப்படுவாரானால், அந்த காலக்கட்டத்தை ”பொற்காலம்” என்று எப்படிச் சொல்லமுடியும்? வேண்டுமானால், அக்காலத்தை ‘இஸ்லாமின் கற்காலம்’ என்றுச் சொல்லலாம். 

முஹம்மதுவிற்கு பிறகு அடுத்த 50 ஆண்டுகள் என்ன நடந்தது என்பதை அறிய கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்:

இஸ்லாமின் அரச குடும்பத்தின் கனிகள் (நடத்தைகள்)

  1. இஸ்லாமிய அரச குடும்பம் - பாகம் 1: முஹம்மதுவின் ஆஸ்தி
  2. இஸ்லாமிய அரச குடும்பம் - பாகம் 2: புதிய அரசர்
  3. இஸ்லாமிய அரச குடும்பம் - பாகம் 3: குர்ஆனில் தெரித்த இரத்தம் (உஸ்மானும் இஸ்லாமிய அரச குடும்பமும்)

The Fruits of Islam's Royal Family

  1. Muhammad's Wealth
  2. The New King
  3. Uthman's Murder
  4. Ali and Aisha
  5. Ali and Mu'awiya
  6. Husayn and Yazid
  7. The Fruit of Islam Judged

அடிக்குறிப்புக்கள்

[1] எண்ணாகமம் 27:13  நீ அதைப் பார்த்தபின்பு, உன் சகோதரனாகிய ஆரோன் சேர்க்கப்பட்டது போல, நீயும் உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய்;

[2] எண்ணாகமம் 27:15  அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: 27:16  கர்த்தருடைய சபை மேய்ப்பன் இல்லாத மந்தையைப்போல் இராதபடிக்கு, 27:17  அந்தச் சபைக்கு முன்பாகப் போக்கும் வரத்துமாய் இருக்கும்படிக்கும், அவர்களைப் போகவும் வரவும் பண்ணும்படிக்கும், மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனாகிய கர்த்தர் ஒரு புருஷனை அவர்கள்மேல் அதிகாரியாக ஏற்படுத்தவேண்டும் என்றான். 

[3] எண்ணாகமம் 27:18  கர்த்தர் மோசேயை நோக்கி: ஆவியைப் பெற்றிருக்கிற புருஷனாகிய யோசுவா என்னும் நூனின் குமாரனை நீ தெரிந்துகொண்டு, அவன்மேல் உன் கையை வைத்து, 

[4] எண்ணாகமம் 27:19  அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி, அவர்கள் கண்களுக்கு முன்பாக அவனுக்குக் கட்டளைகொடுத்து, 27:20  இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் அவனுக்குக் கீழ்ப்படியும்படிக்கு, உன் கனத்தில் கொஞ்சம் அவனுக்குக் கொடு. 

[5] எண்ணாகமம் 27:21  அவன் ஆசாரியனாகிய எலெயாசாருக்கு முன்பாக நிற்கக்கடவன்; அவனிமித்தம் அந்த ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதானத்தில் வந்து, ஊரீம் என்னும் நியாயத்தினாலே ஆலோசனை கேட்கக்கடவன்; அவருடைய கட்டளையின்படியே, அவனும் அவனோடேகூட இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் போகவும் அவருடைய கட்டளையின்படியே வரவும் வேண்டியது என்றார். 27:22  மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே யோசுவாவை அழைத்துக்கொண்டுபோய், அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி, 27:23  அவன்மேல் தன் கைகளை வைத்து, கர்த்தர் தனக்குச் சொன்னபடியே அவனுக்குக் கட்டளைகொடுத்தான்.

[6] உபாகமம் 3:28  நீ யோசுவாவுக்குக் கட்டளை கொடுத்து, அவனைத் திடப்படுத்திப் பலப்படுத்து; அவன் இந்த ஜனங்களுக்கு முன்பாகக் கடந்துபோய், அவனே நீ காணும் தேசத்தை அவர்களுக்குப் பங்கிட்டுக்கொடுப்பான் என்றார். 

உபாகமம் 31:7  பின்பு மோசே யோசுவாவை அழைத்து, இஸ்ரவேலர் எல்லாரும் பார்த்திருக்க, அவனை நோக்கி: பலங்கொண்டு திடமனதாயிரு; கர்த்தர் இவர்களுக்குக் கொடுப்பேன் என்று இவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்துக்கு நீ இந்த ஜனத்தை அழைத்துக்கொண்டு போய், அதை இவர்கள் சுதந்தரிக்கும்படி செய்வாய். 31:8  கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான்.

[7] யோசுவா  1:1  கர்த்தருடைய தாசனாகிய மோசே மரித்தபின்பு, கர்த்தர் மோசேயின் ஊழியக்காரனான நூனின் குமாரன் யோசுவாவை நோக்கி: 

1:2  என் தாசனாகிய மோசே மரித்துப் போனான்; இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக் கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள். 

1:3  நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன். 

1:4  வனாந்தரமும் இந்த லீபனோனும் தொடங்கி ஐபிராத்து நதியான பெரிய நதிமட்டுமுள்ள ஏத்தியரின் தேசம் அனைத்தும், சூரியன் அஸ்தமிக்கிற திசையான பெரிய சமுத்திரம்வரைக்கும் உங்கள் எல்லையாயிருக்கும். 

1:5  நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. 

1:6  பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய். 

1:7  என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக. 

1:8  இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய். 

1:9  நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.

தேதி: 7, டிசம்பர் 2016


உமரின் இதர கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்