பாகம் 2 - செண்பகப்பெருமாளின் பொய்களும் இயேசுவின் வெற்றியும் –ரெவரெண்டு செல்லத்துரை ஆய்வாளரா (அ) சிறந்த ஆய்வாளரா?

(“யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்“ என்ற புத்தகத்துக்கு கொடுக்கப்பட்ட முந்தைய பதிலை படிக்க இங்கு சொடுக்கவும்)

யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும், பக்கம் 7 - வாழ்த்துரை:

முந்தைய  கட்டுரையில், திரு செண்பகப்பெருமாள் அவர்கள் எழுதிய புத்தகம் பற்றிய ஒரு சுருக்கத்தை எழுதியிருந்தேன். அவர் பரிசுத்த வேதாகமத்தின் மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புக்களை எழுதப்போவதாகச் சொன்னேன். அதன் ஆரம்பமாக, அப்புத்தகத்திற்கு  வாழ்த்துரை எழுதிய "Rev. Dr. S. Joel Chellathurai (அருட்திரு முனைவர் எஸ். ஜோயல் செல்லத்துரை)" அவர்களின் வரிகளை சிறிது ஆய்வு செய்வோம்.

அருட்திரு அல்லது ரெவரெண்டு என்றால் என்ன?

ரெவரெண்டு(Reverend) என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்று தேடும் போது, கீழ்கண்ட பதில் கிடைத்தது.

அருட்திரு, 

(பெயரடை) போற்றுதலுக்கு உரிய

வயது வகையில் மதிப்பிற்குரிய

ஆள் வகையில் பண்புமதிப்பார்ந்த

இடவகையில் அருந்தொடர்புகள் கொண்ட

பழக்கவகையில் பழமை நலம்வாய்ந்த

சமய குருமாருக்கு உகந்த

சமயகுருநிலை வாய்ந்த.

ரெவரெண்டு என்ற வார்த்தைக்கு, மதிப்பிற்குரிய, போற்றுதலுக்குரிய போன்ற அர்த்தங்கள் கொடுக்கப்படுகின்றன. முக்கியமாக இவ்வார்த்தை கிறிஸ்தவ குருமார்களை அவர்களின் இறையியல் படிப்பு மற்றும் தகுதியின் அடிப்படையில் பெரும்பான்மையாக கிறிஸ்தவ வட்டாரங்களில்  பயன்படுத்துகிறார்கள். 

இதே பொருளில் தான், நாம் ஆய்வு செய்துக்கொண்டு இருக்கும் புத்தகத்திற்கு வாழ்த்துரை எழுதிய ஜோயல் செல்லத்துரை அவர்களும் "Rev." என்ற பட்டப்பெயரை தன் பெயருக்கு  முன்பாக எழுதியுள்ளார் என்று நான் கருதுகிறேன்.

நான் முனைவர் செல்லத்துரை அவர்களிடம் கேட்கவிரும்பும் கேள்விகள்:

1) நீங்கள், செண்பகப்பெருமாள் அவர்களின் புத்தகம் முழுவதையும் படித்த பிறகு தான் உங்கள் வாழ்த்துரையை எழுதினீர்களா? அல்லது தம்பி செண்பகம் உங்களுக்கு ஒரு ஜிகிரி தோஸ்த் (உயிர் நண்பர்) என்பதால், அவர் சரியாகத் தான் எழுதியிருப்பார் என்ற நம்பிக்கையில் வாழ்த்துரையை எழுதி கொடுத்துவிட்டீர்களா?

2) “நான் புத்தகம் முழுவதையும் படித்து தான் வாழ்த்துரையை எழுதிக்கொடுத்தேன்” என்று நீங்கள் சொல்வதாக  இருந்தால், உங்கள் பெயருக்கு முன்பாக  ஏன் அந்த "ரெவரெண்டு" என்ற பட்டப்பெயரை சேர்த்து பதித்தீர்கள்?

3) அருட்திரு அல்லது ரெவெண்டு என்ற பட்டம், உங்கள் வயதுக்கு கொடுக்கப்பட்டது என்றுச் சொல்வீர்களானால், எந்த  பிரச்சனையும் இல்லை. வயதில் மூத்தவர்கள் அனைவரும் மதிப்பிற்குரியவர்கள் (Reverend) தான். ஆனால், கிறிஸ்தவ குருமார்களுக்கு தகுதியின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட பட்டம் தான் இது என்று நீங்கள் சொல்வதாக இருந்தால், வாழ்த்துரை எழுதுவதற்கு முன்பாக, அந்த ரெவரெண்டு அல்லது அருட்திரு என்ற சொல்லை நீக்கியல்லவா நீங்கள் எழுதியிருக்கவேண்டும்?

(இதனை படித்துக்கொண்டு இருக்கும் கிறிஸ்தவரல்லாத‌ வாசகர்களுக்கு  நான் சொல்லவருவது என்னவென்று இன்னும் சரியாக‌ புரியவில்லை என்று நினைக்கிறேன், மேற்கொண்டு படியுங்கள், எல்லாம் தெளிவாக புரியும்)

4) பைபிளை குற்றம்சாட்டி, அதன் கோட்பாடுகளை பொய்யாக்கமுயலும் ஒரு புத்தகத்திற்கு, ரெவரெண்டு என்ற பட்டம் உள்ள உங்களுக்கு  எப்படி வாழ்த்துரை எழுத  மனது  வந்தது? நீங்கள் உண்மையாளராக இருந்திருந்தால், செண்பகப்பெருமாள் அவர்கள் சொன்னதை ஏற்றுக்கொள்வதாக இருந்தால், உங்கள் நிலைப்பாட்டிற்காக  ஏன், அந்த பொய்யான  'அருட்திரு அல்லது  ரெவரெண்டு' என்ற  பட்டத்தை நீங்கள் நீக்கியிருந்திருக்கக்கூடாது?

5) நீங்கள் முனைவர் பட்டம் போட்டுக்கொண்டீர்கள், அது பிரச்சனை இல்லை ஏனென்றால், எதன் மீதும் ஆய்வு செய்யலாம், அந்த ஆய்வின் அடிப்படையில் முனைவர் பட்டம் தரப்படுகின்றது.

6) உங்கள் மனதைத் தொட்டு நேர்மையான முறையில் சொல்லுங்கள், கிறிஸ்தவ இறையியலை சாடும் புத்தகத்துக்கு வாழ்த்துரை சொன்ன உங்களுக்கு, கிறிஸ்தவ  பட்டமாகிய  'அருட்திரு' எதற்கு? அதை நீங்கள் நீக்கியிருந்திருந்தால், உங்களுக்கு ஒரு  பெரிய  'சபாஷ்' போட்டு இருந்திருப்பேன். ஒரு விஷயத்தை  நாம் நம்பினால், அதில் வைராக்கியமாக இருக்கவேண்டும். அதற்கு எதிரான ஒன்றையும் ('அருட்திரு') நாம் வைத்துக் கொள்ளக்கூடாது. கிறிஸ்தவம் உங்களுக்கு தேவையில்லாத ஒன்றாக மாறியிருக்கும் போது, அதன் பட்டம் மட்டும் உங்களுக்கு எதற்கு?

உங்கள் பெயருக்கு முன்பாக  போட்டுக்கொண்ட ரெவரெண்டு என்ற பட்டப்பெயரின் பின்னணியை நீங்கள் தமிழ் உலகிற்கு தெரிவிப்பீர்கள் என்று நம்புகிறேன். முக்கியமாக, உங்கள் வாழ்த்துரையை படித்து, அந்த புத்தகத்தை படித்த/படிக்கவிருக்கும் என்னைப்போன்ற வாசகர்களுக்காகவாவது, அதன் இரகசியத்தைச் சொல்வீர்கள் என்று நம்புகிறேன்.

இப்போது உங்கள் வாழ்த்துரையில் உள்ள சில வரிகளை அலசுவோம், வாருங்கள், முனைவர் செல்லத்துரை அவர்களே!

'அனைத்து சமய நட்புறவு இயக்கம்':

உங்கள் தம்பி 'செண்பகம்' அவர்களை நீங்கள் 1977ல் சந்தித்ததாகவும் மற்றும் அவர் 'அனைத்து சமய நட்புறவு இயக்கம்' என்ற இயக்கத்தை நடத்தி வந்ததாகவும் எழுதியிருக்கிறீர்கள்.

இந்த இயக்கத்தின் நோக்கமென்ன?  இதன் செயல்பாடுகள் என்னென்ன? நீங்களாவது அல்லது உங்கள் தம்பி செண்பகமாவது சொல்வார்களா?  "அனைத்து சமய நட்புறவு" என்ற பெயரில் ஒரு  இயக்கத்தை அவர் உண்மையாக  நடத்தியிருந்திருந்தால், அதாவது அனைத்து சமய மக்களுக்கு மத்தியில் நட்புறவை உருவாக்க அவர் விரும்பியிருந்தால், என்னைப் போன்றவர்கள் அவருக்கு இப்போது பதிலை கொடுத்துக்கொண்டு இருந்திருக்கமாட்டோம். நேரடியாக புரியும் படி சொல்லவேண்டுமென்றால், அவர் இந்த புத்தகத்தை எழுதியிருந்திருக்கமாட்டார்.

திரு செண்பகப்பெருமாள் அவர்களின் புத்தகத்தை முழுவதுமாக படித்தபிறகு, அவரின் மேற்கண்ட இயக்கம் என்பது பெயரளவிற்குத் தான் என்பதும், அதன் செயல்பாடுகள் அனைத்தும், நட்புறவுக்கு  வித்திடாமல், வெறுப்புணர்வுக்கு வித்திட்டுள்ளது என்பதைத் தான் புரிந்துக் கொள்ளமுடிகின்றது.

சிறந்த ஆய்வாளர்:

அதன் பிறகு நீங்களும், அவரும் பைபிள் கற்கத் தொடங்கினீர்கள் என்று எழுதியுள்ளீர்கள். இவரோடு சேர்ந்தா நீங்கள் பைபிளைக் கற்றீர்கள்? அல்லது உங்களோடு சேர்ந்தா அவர் பைபிளைக் கற்றார்? எது எப்படியோ, உங்களுக்கு ஒரு  ரெவரெண்டு பட்டமும் கிடைத்துவிட்டது, அவர் ஒரு சிறந்த ஆய்வாளர் என்ற பட்டத்தையும் நீங்கள் வாழ்த்துரையில்  அவருக்கு கொடுத்துவிட்டீர்கள்.

என்னை மன்னிக்கவேண்டும் ஐயா! உங்களுக்கு சரியாக மனிதர்களை எடைப்போடத் தெரியவில்லை. ஒரு மட்டரகமான  ஆய்வைச் செய்து, பல  பொய்களை தெரிந்தே சொன்ன செண்பகப்பெருமாளையா நீங்கள் 'சிறந்த ஆய்வாளர்' என்றுச் சொல்கிறீர்கள்? அவரின் இந்த புத்தகத்தை ஒருமுறை படித்துப்பாருங்கள்! ப்ளீஸ்! உங்களை கெஞ்சி கேட்கிறேன். 119 பக்கங்கள் கொண்ட சிறிய புத்தகத்தை படிக்க ரெவரெண்டுகளுக்கு அதிக நேரம் பிடிக்காது என்று நான் விசுவாசிக்கிறேன்.

பைபிள் கருத்தரங்குகள் நடத்தும் செண்பகப்பெருமாள்:

உங்களை எப்படி கடிந்துக்கொள்வது என்று தான் எனக்கு புரியவில்லை. நீங்கள் பெரியவர் ஆகிவிட்டீர்கள், இதில் 'ரெவரெண்டு' என்ற பட்டமும் கூட இருப்பதால், நான் உங்களை கடிந்துக்கொள்ள‌மாட்டேன் (மனதில் கூட). 

கீழ்கண்ட உங்களின் வரிகளின் அர்த்தமென்ன? கொஞ்சம் தெளிவாகச் சொல்லமுடியுமா? அவரைப்போல  நீங்களும் ஆட்டுத்தோலை உடுத்தியுள்ள நரியா? என்ற சந்தேகம் வருகிறது:

"இப்போதும் பல இடங்களில் விவிலியக் கருத்தரங்குகள் நிகழ்த்தியுள்ளார். எங்கள் மெய்யியல் கல்வி மையமும் கணபதிபுரம்  தர்மபரிபாலன இயக்கமும் இணைந்து நிகழ்த்தும் நிகழ்வில் தொடர் பைபிள் வகுப்புக்கள் நிகழ்த்துகின்றார். அங்கு பகவத் கீதை வகுப்புக்களும் நடந்தன. அதில் பல கிறிஸ்தவ போதகர்களும்  கிறிஸ்தவர் அல்லாதவர்களும் கலந்துள்ளனர். இறையியல் கல்லூரியில் அவரது நிகழ்ச்சியில் நானும் கல்ந்திருக்கின்றேன்" (பக்கம் 7, வாழ்த்துரை)

மேற்கண்ட வரிகளை படிக்கும் வாசகர்கள் என்ன நினைப்பார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? 

செண்பகப்பெருமாள் அவர்கள் பல பைபிள் கருத்தரங்குகளை நடத்தியுள்ளார்! பைபிள் வகுப்புகளை எடுத்துள்ளார்! என்று வாசகர்கள் நினைப்பார்கள். ஆனால், அந்த கருத்தரங்குகளில் அவர் என்ன பேசினார்? பைபிளை விமர்சித்துப்பேசினாரா (இந்த புத்தகத்தில் உள்ளது போல) அல்லது ஆதரித்து பேசினாரா? என்பதை நீங்கள் சொல்ல மறந்துவிட்டீர்கள்! இல்லை இல்லை மறைத்துவிட்டீர்கள்! ரெவரெண்டு அவர்களே!

நீங்கள் நேர்மையானவராக இருந்திருந்தால், அவர் எவைகளை பேசினார் என்பதை ஒருவரியில் சொல்லியிருப்பீர்கள். ஆனால், ஆட்டுத்தோலை போர்த்துக்கொண்டு வரும் நரிகளிடம் உண்மையை எதிர்ப்பார்க்கமுடியுமா என்ன?

என்னுடைய சந்தேகம் சரியாக இருந்தால், அவரும் சரி நீங்களும் சரி, உங்களின் அரைகுறை ஆய்வின் மூலமாக சமைக்கப்பட்ட ஆரோக்கியமற்ற உணவை, சராசரி கிறிஸ்தவர்களுக்கு உண்ணக்கொடுத்து, அவர்களின் ஆன்மீக வாழ்வை கெடுத்து இருந்திருப்பீர்கள். அதன் தொடர்ச்சியாகத் தான் இந்த புத்தகத்தையும் அவர் எழுதியுள்ளார் என்பதும் நிச்சயமே!

தம்பி செண்பகத்தின் கருத்து உங்கள் கருத்தாகாதோ!

உங்கள் வாழ்த்துரையின் கடைசி 5 பத்திகளில் நீங்கள் எழுதியவைகளின் மூலம், உங்களுக்கு  பைபிளின் மீதும், கிறிஸ்தவத்தின் மீதும் நம்பிக்கை அற்றுப்போய் உள்ளது என்பதை அறியமுடிகின்றது. விஷயம் இப்படி இருக்க, எதனால் இன்னும் 'அருட்திரு/ரெவரெண்டு' என்ற பட்டத்தை சுமந்துக்கொண்டு திறிகிறீர்கள் என்பது தான் எனக்கு புரியாத புதிராக உள்ளது.  (ஒருவேளை இந்த புத்தகத்தை அடுத்த பதிப்பு பிரிண்ட் செய்தால், உங்கள் பெயருக்கு முன்னால் வேண்டாத பிள்ளையாக உங்களுக்கு பாரமாக‌ இருக்கும், அந்த பட்டத்தை தூக்கி வீசச்சொல்லுங்கள், உங்கள் தம்பியிடம்).

யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும், பக்கம் 8 - வாழ்த்துரை:

உங்கள் வாழ்த்துரையில் (பக்கம் 8ல்), "பைபிள், எபிரேய இஸ்ரயேல், யூத இனத்தின் விடுதலை வரலாறு என்பது அவரது கருத்தாகும்" என்று எழுதியுள்ளீர்கள். அப்படியானால், உங்கள் கருத்து என்ன? நீங்கள் உங்கள் தம்பியின் கருத்தை ஆமோதிக்கிறீர்களா? அல்லது எதிர்க்கிறீர்களா? உங்கள் வரிகளை கவனிக்கும் போது, தம்பி(செண்பகம்)  எவ்வழியோ அண்ணனும் (செல்லத்துரையும்) அவ்வழி என்பது போல  தெரிகிறது. மேலும், "பைபிள்" என்ற வார்த்தையை “எதை கருத்தில்” கொண்டு எழுதினீர்கள்? இங்கு பழைய ஏற்பாட்டை மட்டுமே குறிப்பிடுகின்றீர்களா? அல்லது புதிய ஏற்பாட்டையும் சேர்த்தே "பைபிள்" என்று சொல்கிறீர்களா?

உங்கள் தம்பி மற்றும் உங்கள் கண்களுக்கு பழைய ஏற்பாட்டில் "வெறும் யூத விடுதலை மட்டுமே" தென்படுகின்றதா? உலக இரட்சிப்பு பற்றி வேறு எதுவும் தென்படவில்லையா? அல்லது படிக்கவில்லையா?

ஆதியாகமம் 12:3. உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.

ஆபிரகாம் என்ற ஒரு நபரை “உலக இரட்சிப்பின் திட்டத்திற்கு” ஆரம்பமாக தெரிந்துக்கொள்வதற்கு முன்பாக, உலகமனைத்தையும் ஒரே பிரிவாக கர்த்தர் பார்க்கவில்லையா?  ஆதாம் தொடங்கி நோவா வரைக்கும் பழைய ஏற்பாடு பேசும் போது, அது எபிரேய மக்கள் பற்றி பேசியது என்று உங்கள் தம்பியின் ஆய்வும், உங்களின் ஆய்வும் தெரிவிக்கின்றதா? 

ஆபிரகாமின் சந்ததி மூலமாக மேசியாவை அனுப்பி, அதன் மூலமாக உலக  இரட்சிப்பிற்கு வித்திட்ட பழைய ஏற்பாட்டு கையக்கருத்தை புரிந்துக் கொள்ளக்கூடாத அளவுக்கு உங்கள் மனதும் சிந்தையும் மங்கியுள்ளதா, ரெவரெண்டு அவர்களே!

“நினிவே” என்ற அந்நிய ஜனங்களின் இரட்சிப்பு பற்றி அக்கரைக்கொண்டு, ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார் தேவன், அதற்காக ஒரு புத்தகத்தையே பைபிளில் வைத்திருக்கிறார் தேவன். உங்கள் தம்பியின் ஆய்வின் படி, பைபிள் என்பது வெறும் இஸ்ரேல் மக்களின் விடுதலை மட்டுமே என்றால், நினிவேயின் இரட்சிப்பின் சரித்திரம் ஏன் பழைய ஏற்பாட்டில் உள்ளது? சிறிது ஆய்வு செய்து சொல்லமுடியுமா?

செண்பகம் அவர்களின் கருத்துக்கள் பற்றி இன்னும் ஆழமான பதிலை, இதர மறுப்புக்களில் தகுந்த இடங்களில் காண்போம்.

இரண்டாவதாக, "கிறிஸ்தவம் ஒரு நம்பிக்கை மார்க்கம் என்பார் அவர்" என்று எழுதியுள்ளீர்கள். இது எப்படி உள்ளதென்றால், "என் தாய் ஒரு விபச்சாரி என்று என் நண்பன் சொல்கிறான்" என்று அந்த தாய் பெற்ற மகன் சிறிதும் சலனமில்லாமல் சொல்வது போல உள்ளது. 

அருட்திரு செல்லத்துரை அவர்களிடம் தமிழ் கிறிஸ்தவர்கள் கேட்கின்ற கேள்வி என்னவென்றால், "மற்றவர்கள் சொல்வது ஒரு பக்கம் இருக்கட்டும், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்பது தான். கிறிஸ்தவம் ஒரு நம்பிக்கை மார்க்கம் என்று சொல்வதிலிருந்து, செண்பகம் என்ன சொல்லவருகின்றார், அதன் உள்ளார்ந்த  கருத்து என்னவென்று உங்களுக்கு புரிகின்றதா? அல்லது புரியவில்லையா? இதுவும் புரியாமல் நீங்கள் எப்படி "அருட்திரு" ஆகிவிட்டீர்கள் என்பது தான் எனக்கு சந்தேகமாக உள்ளது. செண்பகப்பெருமாள் அவர்களின் இந்த புத்தகத்துக்கு கொடுக்கவிருக்கும் பதில்களிலிருந்து, உங்கள் தம்பியின் கருத்தும், உங்கள் கருத்தும் பொய்யானவை என்பது தெளிவாக விளங்கும், அதுவரைக்கும் சிறிது காத்திருக்கவேண்டும். உங்கள் இருவரின் முகமுடி கிழிக்கப்பட்டு, உள்ளே என்ன உள்ளது என்பதை தெளிவாக காட்டிவிடும் என் மறுப்புக்கள்.

மூன்றாவதாக, "பைபிளில் சில முரண்பாடுகள் இருந்தாலும். . ." என்ற வரிகளை எழுதிய பிறகும் உங்களுக்கு "ரெவரெண்டு/அருட்திரு" என்ற பட்டப்பெயர்கள் தேவையா?  

வாழ்த்துரை எழுதிய நம் மதிப்பிற்குரிய "அருட்திரு முனைவர் எஸ் ஜோயல் செல்லத்துரை" அவர்கள் இன்னும் 'கிறிஸ்தவ ஊழியங்களில்' உள்ளாரா? என்று யாராவது கண்டுபிடித்து எனக்கு தெரிவிப்பார்களா? ஏனென்றால், இவர் சார்ந்துள்ள ஊழிய ஸ்தாபனத்தோடு தொடர்பு கொண்டு, இவரின் சந்தேகங்களை தீர்த்துவிடுங்கள் என்று கேட்டுக்கொள்ள வேண்டியுள்ளது. இவர் முரண்பாடுகள் என்றுச் சொல்கிறாரே! அவைகள் என்னவென்று இவரிடம் கேட்டு அதனை தீர்க்க உங்களால் முடிய‌வில்லையா? என்று அந்த ஸ்தாபனத்திடம்/குழுவிடம் கேட்கவேண்டும்.

நான்காவதாக, "ஆனால், இயேசுவுக்கு பின் எழுந்த பவுல், கிரேக்கரின் பணியாளர் என்பதை மிகவும் தெளிவாக, வரலாற்று பின்னணியுடன் விளக்குகிறார் ஆசிரியர் செண்பகப்பெருமாள் அவர்கள்" என்று எழுதியதிலிருந்து, உங்கள் உள்ளத்தில் ஒளிந்துள்ள நம்பிக்கை என்னவென்று எனக்கு புரிந்துவிட்டது. நீங்கள் கிறிஸ்தவத்தை கைகழுவி பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதும், உங்களுக்கும் கிறிஸ்தவ ஊழியத்திற்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை என்பதும் இப்போது கிறிஸ்தவர்கள் புரிந்துக் கொள்வார்கள். 

இப்புத்தகத்தின் நம்பகத்தன்மைக்கு எதிராக, பிழைகளுக்கு எதிராக நான் முன் வைக்கப்போகும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லவேண்டிய கடமை, உங்கள் தம்பி செண்பகப்பெருமாள் உடையது மட்டுமல்ல, அது உங்களுக்கும்  கடமையாக உள்ளது. வேறு வகையில் சொல்வதென்றால், அவர் விதைத்த விதைக்கான அறுவடையை அவரோடு சேர்ந்தே நீங்களும் அறுக்கவேண்டும். பவுலடியார் குறித்து உங்கள் தம்பி எழுதிய ஒவ்வொரு வரிக்கும் பதில் கிறிஸ்தவத்திடம் உள்ளது, அதனை அடுத்தடுத்த மறுப்புக்களில் காண்போம், அப்போது தான் உங்கள் ஆய்வின் தரம் புரியும்.

ஐந்தாவதாக, "புற இனத்தவர் என்கின்ற கிரேக்கருக்கு இயேசுவைக் கொண்டுசென்ற பவுல் ஒரு பொய் கூறினார் என்பது அவரது கருத்து" என்று எழுதியுள்ளீர்கள். 

மறுபடியும் அதே கேள்வி தான், "உங்கள் கருத்தென்ன?" பவுலடியார் பொய் சொன்னார் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? எதை சொன்னாலும், "தம் தம்பி கருதுகிறார், நம்புகிறார்" என்றுச் சொல்லி தப்பித்துக்கொள்ள பார்க்கிறீர்களா! நீங்கள் என்ன நம்புகிறீர்கள் என்று சொல்லவே இல்லையே!

ரோமர் 3:5-8 வரையிலான வசனங்களின் பொருளை அறியாதவரா "ரெவரெண்டு"? அய்யோ பாவம்! 1977லிருந்து பைபிளை செண்பகப்பெருமாள் அவர்களோடு சேர்ந்து கற்கும் இவ்விருவருக்கும், இந்த நாங்கு வசனங்களின்(ரோமர் 3:5-8) பொருளை சொல்லித்தர தமிழ் நாட்டில் எந்த ஒரு போதரும், ஊழியரும் இல்லையா! அல்லது சொல்லப்பட்ட பதிலை இவர்கள் புறக்கணித்துவிட்டார்களா?

ரோமர் 3: 5. நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன்; நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப்பண்ணினால் என்ன சொல்லுவோம்? கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் அநீதராயிருக்கிறார் என்று சொல்லலாமா?

6. அப்படிச் சொல்லக்கூடாது; சொல்லக்கூடுமானால், தேவன் உலகத்தை நியாயந்தீர்ப்பதெப்படி?

7. அன்றியும், என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்?

8. நன்மை வரும்படிக்குத் தீமைசெய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா? நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்களென்றும் சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள் மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும்.

கடைசியாக, "இந்த நூல் மதம் கடந்த ஆன்மீகத்துக்குப் பயன்படும் என்பது என் கருத்து, சமூக நல்லிணக்கம் சார்ந்த தம்பியின் நல்முயற்சிக்கு என் பாராட்டு கலந்த நல்வாழ்த்துக்கள்" என்று எழுதியுள்ளீர்கள்.

இப்போதாவது உங்கள் "கருத்தைச்" சொன்னதற்காக மிக்க நன்றி. 

"மதம் கடந்த ஆன்மீகம்" என்றால் என்னவென்று சிறிது விளக்கமுடியுமா? 

மதம் கடந்த ஆன்மீகம் என்பது நாத்தீகமா? அல்லது இந்துத்துவமா?

உங்கள் தம்பியின்  முயற்சி "சமூக நல்லிணக்கம் சார்ந்த" முயற்சியா? இது எப்படி? உங்கள் தம்பி எழுதிய இந்த புத்தகத்தின் சாரத்திற்கு நீங்கள் கொடுக்கும் தலைப்பு "சமூக நல்லிணக்கம்" அடேங்கப்பா! என்னே ஒரு பாராட்டு!

இந்த புத்தகத்தை படிக்கும் கிறிஸ்தவர்களுக்கு எப்படி சமூக நல்லிணக்கம் உண்டாகும்? தங்கள் நம்பிக்கையை கேலி செய்து, அரைகுறையாக ஆய்வு செய்து விமர்சனம் செய்து, கிறிஸ்தவர்களின் மனதை துக்கப்படுத்தும் படி செண்பகம் அவர்கள் புத்தகம் எழுதினால், இதனால் கிறிஸ்தவர்களுக்கு எப்படி நல்லிணக்கம் உண்டாகும்? யரோடு நல்லிணக்கம் உண்டாகும்? அவரது புத்தகத்தில் நல்லிணக்கம் உண்டாக்கும் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பது என்பது தான் உண்மை, இதனை சவாலாக நான் உங்கள் முன் வைக்கமுடியும்? இந்த சவாலை ஏற்க நீங்கள் தயாரா? 

இது ஒரு புறமிருக்கட்டும், உங்கள் கருத்துப்படி "இந்த புத்தகத்தினால் யாருக்கு யாரோடு நல்லிணக்கம் உண்டாகும்"? என்று உங்களால் விவரிக்கமுடியுமா?

இப்புத்தகத்தை கிறிஸ்தவர்களும், இந்துக்களும், முஸ்லிம்களும் படித்தால், இவர்களில் யாருக்கு இடையில் நல்லிணக்கம் உண்டாகும்?  சிறிது கடினமான வார்த்தைகளை இங்கு பயன்படுத்தப்போவதற்காக உங்களிடமும், வாசகர்களிடமும் மன்னிப்பை கோருகிறேன். ரெவரெண்டு முனைவர் எஸ் ஜோயல் செல்லத்துரை அவர்களே, நீங்கள் ஒரு பொய்யர், ஏமாற்றுக்காரர், யாருக்காகவோ மறைமுகமாக வேலை செய்ய உங்களை விற்றுப்போட்ட ஒரு வியாபாரி என்பது என் குற்றச்சாட்டு. இந்த புத்தகத்தை ஒரு கிறிஸ்தவரும், இந்துவும் சேர்ந்து படித்தால், இவர்கள் மத்தியில் நல்லிணக்கம் எப்படி உண்டாகும்? இந்த புத்தகத்தினால், அந்த இந்து பைபிளையும், கிறிஸ்தவத்தையும் கேலி செய்ய ஆரம்பிப்பான், அல்லவா! இப்படி இருக்க அந்த கிறிஸ்தவர் மற்றும் இந்துவின் இடையில் இது எப்படி நல்லிணக்கம் உண்டாக உதவும்? ஆட்டுத்தோலை போர்த்திய நரியாக அல்லவா நீங்கள் மாறி எழுதுகிறீர்கள்! 

செல்லத்துரை அவர்களே, உங்களை விட நாத்தீகர்கள் மீது எனக்கு கௌரவம் அதிகம், ஏனென்றால் அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படையாகச் சொல்லிவிடுகிறார்கள். நீங்களோ, உங்கள் நிலைப்பாட்டை ம‌றைக்கிறீர்கள்! ஏன்? நேரடியாகச் சொல்லவேண்டியது தானே “எனக்கு பைபிள் மீது நம்பிக்கை இல்லை, நான் ஒரு நாத்தீகன், அல்லது ஒரு இந்துத்துவவாதி அல்லது xyz. . ." என்று சொல்லி விமர்சித்தால், உங்கள் மீது கிறிஸ்தவர்களின் கௌரவம் உயரும்.

உங்கள் தம்பி செண்பகப்பெருமாள் அவர்களுக்கு கொடுக்கவிருக்கும் பதில்கள் அனைத்தும் உங்களுக்கும் கொடுப்பட்டது என்பதை அறியுங்கள். உங்களால் முடிந்தால் என் கேள்விகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் பதில் சொல்ல முயலுங்கள்.

கடைசியாக, ஒரு கேள்வி, அது எப்படி செண்பகம் அவர்கள் 'தொடர் பைபிள் வகுப்புக்கள் நிகழ்த்துகின்றார்' என்று எழுதிவிட்டு, 'அங்கு பகவத்கீதை வகுப்புக்களும் நடந்தன (பக்கம் 7) ' என்று உங்களால் எழுதமுடிந்தது? 

பைபிளுக்கும் பகவத்கீதைக்கும் என்ன சம்மந்தம்? இவ்விரு புத்தகங்களின் “அடிப்படை கோட்பாடுகளை” காற்றில்  பறக்க‌  விட்டுவிட்டு, உங்கள் கள்ளத்தனமான‌ நோக்கத்திற்காக, மேலோட்டமாக இவ்விரு புத்தகங்களில் வகுப்புக்கள் நடத்தி, ஏதோ ஒன்றை நீங்களும் உங்கள் தம்பியும் அடையமுயலுகிறீர்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

 “இரண்டு எஜமான்களுக்கு உங்களால் நேர்மையாக ஊழியம் செய்யமுடியாது” என்று இயேசு கூறினார். முக்கியமாக, இந்த இரண்டு எஜமான்களும் தங்கள் அடிப்படை கோட்பாடுகளில் ஒன்றை ஒன்று எதிர்க்கிறவர்களாக இருந்தால், நிச்சயம் இரண்டு பேருக்கு (பைபிள், மற்றும் பகவத்கீதை) ஊழியம் செய்ய உங்களால் முடியாது.

மத்தேயு  6:24. இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து ஒருவனைச் சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.

நீங்களும் உங்கள் தம்பியும், உங்கள் வகுப்புக்களில் பைபிள் மற்றும் பகவத்கீதையை கற்கவந்தவர்களை மறைமுகமாக ஏமாற்றியிருக்கிறீர்கள்! அல்லது உங்கள் தம்பி, அவரது தற்போதைய புத்தகத்தில் எழுதியது போன்று, பைபிளை குற்றப்படுத்தி, அதன் தெய்வீகத்தன்மைக்கு எதிராக போதித்து, பகவத்கீதையை உயர்த்தி பிடித்து இருந்திருக்கவேண்டும். பைபிளும் பகவத்கீதையும் நல்லிணக்கத்திற்காக செண்பகப்பெருமாள் அவர்களால் அந்த வகுப்புக்களில் போதிக்கப்பட்டதா? காலம் இதற்கு பதில் சொல்லும், தேவையில்லை நானே பதில் சொல்லுவேன், காத்திருங்கள் பதில் கிடைக்கும்.

எந்த புத்தகமும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதன்று:

உலகத்தில் உள்ள எந்த புத்தகமும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதல்ல என்பது என் கருத்து. அதாவது, பைபிள், குர்‍ஆன், பகவத்கீதை இன்னும் வேறு எந்த புத்தகமாக இருந்தாலும் சரி, அதனை மக்கள் ஆய்வு செய்து தங்கள் கருத்தைச் சொல்ல அவர்களுக்கு உரிமை உண்டு. உண்மையாக ஆய்வு செய்து கடுமையாக விமர்சித்தாலும் சரி, மறு ஆய்வு செய்து அதற்கு தகுந்த பதில்களை சொல்லவேண்டியது, அந்த புத்தகத்தை நம்பும் மக்களுடைய கடமையாகும். ஆனால், செண்பகப்பெருமாள் போன்று அரைகுறை ஆய்வு செய்து, பொய்யான விமர்சனங்களை முன்வைப்பார்களேயானால், அதற்கு தகுந்த மறுப்பு கொடுக்கப்படவேண்டும். இதுவும் உலக மக்களுக்கு அனுமதிக்கப்பட்டதே! 

“விமர்சனங்களை” உலகத்திலிருந்து எடுத்துவிட்டால், அடுத்த நிமிடத்திலிருந்து உலகத்தில் “கருத்தியல் முன்னேற்றம்” இல்லாமல் போகும், மனிதன் பல கோணங்களில் சிந்திப்பது நின்றுவிடும், இந்த நிலை மிகவும் ஆபத்தானது. ஆகையால் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன, அதே வேளையில் அவைகள் உண்மையானவைகளாக இருக்கவேண்டும், தெரிந்தே ஏமாற்றக்கூடாது.

எஸ் செண்பகப்பெருமாள் அவர்களுக்கு அவருடைய ஆய்வுக்காக‌ என்னுடைய வாழ்த்துக்கள். இவரின் விமர்சனங்கள் மூலமாகத் தான் பைபிளின் சத்தியத்தை இன்னும் ஆழமாக கற்கும் வாய்ப்பு நமக்கு கிடைக்கப்போகிறது (மேற்கத்திய நாடுகளில் பல்லாண்டுகாலமாக ஆய்வு செய்து விமர்சனங்கள் வைத்தவண்ணமாக உள்ளன, அவைகளுக்கு நிகராக பதில்களும் மறுப்புக்களும் முன்வைக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. இப்போது தான் இந்தியாவில் பைபிளை விமர்சிக்க ஆரம்பித்துள்ளார். இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள தமிழ் கிறிஸ்தவர்கள் தயங்கக்கூடாது).

கிறிஸ்தவர்களுக்கு வேண்டுகோள்: 

அன்பான சகோதர சகோதரிகளே! நீங்கள் செண்பகப்பெருமாள் அவர்களின் தற்போதைய புத்தகத்தை வாங்கி படியுங்கள். உங்களைப்போன்ற சத்தியம் அறிந்தவர்கள் அமைதியாக இருப்பதினால் தான் அரைவேக்காடுகள் பைபிளை படித்து, தங்கள் அறியாமையையும் முட்டாள்தனமான வாதங்களையும் பரப்பிக்கொண்டு வருகிறார்கள். எனவே, நீங்கள் இப்புத்தகத்தை படியுங்கள், நான் நிச்சயமாகச் சொல்லமுடியும், நீங்கள் படிக்கும் போது, செண்பகப்பெருமாளின் அறியாமை உள்ளங்கை நெல்லிக்கனிபோல தெரியும், உடனே ஆடியோ, வீடியோ மற்றும் எழுத்து மூலமாக  பதில்களை கொடுங்கள். என் கடமையை நான் செய்கிறேன், உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். 

கிறிஸ்தவ சமுதாயம் "சிந்திக்கும்" சமுதாயம் என்பதை  நாம் மற்றவர்களுக்கு உணர்த்தவேண்டும். கட்டுக்கதைகளையும், மூடபழக்கவழக்கங்களைக் கொண்ட இதர மார்க்கங்களை பின்பற்றுபவர்கள் போல  அல்லாமல், நம்முடைய நம்பிக்கை "உண்மையான மார்க்கத்தின்" மீது சார்ந்துள்ளது என்பதை உலகிற்கு உணர்ந்த வேண்டும்.

II பேதுரு 1:16 நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகியஇயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்.

அன்றைக்கு அப்போஸ்தவர்கள், இயேசுவின் மகத்துவத்தை கண்ணாரக்கண்டு சாட்சி சொன்னார்கள், நாம் நம்முன் இருக்கும் சரித்திரத்தை, வரலாற்றை, பரிசுத்த வேதாகமத்தின் மீது செய்யப்பட்ட  ஆய்வுகளை படித்து புரிந்துக்கொண்டு, செண்பகப்பெருமாள் மற்றும் முனைவர் ஜோயல் செல்லத்துரை போன்றவர்களின் முட்டாள்தனமான வாதங்களுக்கு பதில்களைத் தரவேண்டும்.

(செண்பகப்பெருமாள் அவர்களுக்கு ஒரு நற்செய்தி, அதாவது அவரது புத்தகத்திற்கு ஒரு இலவச விளம்பரத்தை நான் கொடுத்துள்ளேன். இனி இப்புத்தகத்தின் விற்பனை சூடுபிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஒரு சிக்கல் என்னவென்றால், இப்புத்தகத்தை வாங்கி படிக்கும்  கிறிஸ்தவர்களில் சிலர் அவருக்கு பதில்களை பல வகைகளில் கொடுப்பார்கள் என்பதையும் மனதில் வைக்கவும்)

இப்போதைக்கு ரெவரெண்டு முனைவர் எஸ் ஜோயல் செல்லத்துரை அவர்களை விட்டுவிட்டு, திரு எஸ் செண்பகப்பெருமாள் அவர்களின் “முகவுரையை” ஆய்வு செய்ய தொடங்குவோம்.  


"செண்பகப்பெருமாளின் பொய்களும் இயேசுவின் வெற்றியும்" - தொடர் பதில்கள்

உமரின் மறுப்புக்கள்/கட்டுரைகள்